மக்களுக்கு சேவை செய்ய அதிகாரம் கொடுங்கள்... தேர்தல் களத்தில் குதித்த நடிகர் கிட்டி!
சென்னை: மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். அதற்கு ஆர்வம் மட்டும் போதாது, அதிகாரமும் வேண்டாம். அந்த அதிகாரத்தை மக்கள் எனக்குத் தர வேண்டும் என்று சட்டசபைத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் கிட்டி என்கிற ராஜா கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் கிட்டி கமல்ஹாசனின் நாயகன் படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர். தயாரிப்பாளர், இயக்குநர் என திரையுலகில் அறியப்பட்ட அவர் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்தவர். பல்வேறு பிரபல நிறுவனங்களில் எச்ஆர் பிரிவில் உயர் பொறுப்புகளை வகித்தவர்.
வேளச்சேரியில் வசித்து வரும் அவர் சமூக சேவகராகவும் செயலாற்றி வருகிறார். வாய்ஸ் ஆப் வேளச்சேரி என்ற பெயரில் அவர் வேளச்சேரியின் வளர்ச்சிக்காக இளைஞர்கள், படித்தவர்கள், சமூகத்தில் பல்வேறு அந்தஸ்தில் இருப்பவர்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறார். முன்பு அன்னா ஹஸாரேவுடன் இணைந்திருந்தார். தற்போது சுயேச்சையாக வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் கிட்டி. அப்போது வேளச்சேரி தொகுதிக்கு தான் செய்யவுள்ள திட்டங்கள் குறித்து விவரித்தார். மக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மக்கள் பொதுவாக அரசியலில் மாற்றத்தை எதிர்ப்பார்க்கின்றனர். நான் எந்தக்கட்சியையும் சாராதவன், நான் வசிக்கும் தொகுதியான வேளச்சேரியில் என்னால் முடிந்த அளவில் மக்களுக்கு உதவிசெய்து வந்திருக்கிறேன்.
தனிமனிதனாக இருக்கும்போதே மக்களுக்கு சேவை செய்ய முடியும்போது, அரசு அதிகாரம் இருந்தால் இன்னும் கூடுதலாக செய்யமுடியும் என்று நினைத்தேன். அதன் விளைவாகவே இந்த தேர்தலில் சுயேட்சையாக களம் இறங்குகிறேன்.
தேர்தல் ஆணையம் எனக்கு ஆட்டோ சின்னத்தை வழங்கியிருக்கிறது. ஆட்டோ ஓட்டும் தொழில் என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதனால் மகிழ்ச்சியுடன் இதை ஏற்றுக்கொண்டேன்.
மற்ற கட்சிகளெல்லாம் சரியில்லை என்று கூற மாட்டேன். ஒவ்வொரு கட்சியிலும் நல்லவைகளும் இருக்கின்றன, கெட்டவைகளும் இருக்கின்றன. அதற்குள் போக நான் விரும்பவில்லை. நான் வெற்றிபெற்றால் என் தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வேன். அதற்காக நிறைய திட்டம்போட்டு வைத்துள்ளேன்.
என்னுடன் இருப்பவர்கள் அனைவருமே படித்த இளைஞர்கள், சமூகசேவகர்கள், மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள்... மக்களுக்கு சேவை செய்ய ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது. அதிகாரமும் இருந்தால்தான் நிறைவேற்ற முடியும். ஆகவே மக்கள் எனக்கு ஆட்டோ சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றார் கிட்டி.