மெரினாவில் நடிகர் லாரன்ஸ் சமாதானப் பேச்சு.. ஒரு பிரிவு இளைஞர்கள் கலைகிறார்கள்!
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்களிடம் நடிகர் லாரன்ஸ் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ஆளுநர் கூறியிருப்பதை ஏற்று அனைவரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்களிடம் சமதான முயற்சியில் ஈடுபட்டார். அப்போது ஆளுநர் உரையில் ஜல்லிக்கட்டு சட்டம் நிரந்தரமாக்கப்படும் என கூறப்பட்டிருப்பதாக அவர் கூறினார். இதையடுத்து ஒரு பிரிவு மாணவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் பலர் கலையாமல் உள்ளனர்.
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதையடுத்து சிதறியோடிய போராட்டக்குழுவினர் கடலோரத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களிடம் பேசிய நடிகர் லாரன்ஸ் ''ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் நிரந்தரமாக்கப்படும் என ஆளுநர் உறுதியளித்துள்ளார். அரசின் உறுதியை மதுரை அலங்காநல்லூர் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அவர்களைப் போல் நாமும் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும். ஆளுநர் கூறியிருப்பதை அனவைரும் ஏற்க வேண்டும்.
தடியடி நடத்தியதற்கு காவல்துறை போராட்டக்காரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யக்கூடாது''. இவ்வாறு நடிகர் லாரன்ஸ் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசினார். இதையடுத்து ஒரு பிரிவு மாணவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் பலர் கலையாமல் உள்ளனர்.