தொடர்ந்து போராட்டத்தில் இருந்ததால் நடிகர் லாரன்ஸுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு
சென்னை: மெரீனா கடற்கரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு புரட்சியில் தொடர்ந்து ஆறு நாட்களாக இரவு பகலாக லாரன்ஸ் இருந்ததால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போட்டி நிரந்தரமாக நடத்த அனுமதிக்கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் வரலாற்றில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் கடும் குளிரையும் பனியையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கடையில் ஒருவார காலமாக இரவு பகல் பாராமல் நடைபெறுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி கோரியும் பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் முழக்கமிட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேரில் சந்தித்த நடிகர் லாரன்ஸ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து அவர்களுடன் இரவு பகலாக லாரன்ஸ் இருந்ததால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் மற்றும் கழுத்து வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இருதினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த லாரன்ஸ் சிகிச்சைக்கு பின்பு உடனடியாக போராட்ட களத்திற்கு திரும்பினார்.