''அதை''செய்தது நான் இல்லை... என்னை நம்புங்க... பதறிய நடிகர் மனோபாலா
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து வாட்ஸ்அப் குரூப்பில் தரக்குறைவாக விமர்சித்ததாக நடிகர் மனோபாலா மீது சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை மறுத்து
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறப்பட்ட புகாரை நடிகர் மனோபாலா மறுத்துள்ளார். தனது செல்போனை யாரோ தவறாக பயன்படுத்திவிட்டதாக கூறிய அவர் இதுகுறித்து போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளார்.
நடிகர் மனோபாலா பல ஆண்டுகளாக அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக உள்ளார். இந்நிலையில் இவர் மீது நங்கநல்லூரைச் சேர்ந்த சீனி சரவணன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் நேற்று புகார் அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் மறைந்த ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. நடிகர் மனோபாலா சக நடிகர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குறித்தும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்தும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.
பதறிக்ககொண்டு கமிஷனரிடம் வந்த மனோபாலா
இந்நிலையில் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்த மனோபாலா ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் படப்பிடிப்புக்குபோகும்போது ஷாட் இடைவேளையின்போது எனது செல்போனை வைத்துவிட்டு போவது வழக்கம்.
யாரோ அந்த வேலை செய்துட்டாங்க
அப்போது யாரோ என் செல்போனை தவறாக பயன்படுத்தி, அதை உள்நோக்கத்தோடு அனுப்பி இருக்கக் கூடும். நான் அதிமுகவில் கடந்த 15 வருடங்களாக உறுப்பினராக மட்டுமில்லாமல் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளேன்.
புகழுக்கு களங்கம் ஏற்படுத்த திட்டம்
என்மேல் என் புகழ்மேல் களங்கம் கற்பிக்கவும், அவதூறு பரப்பவும் திட்டமிட்டு செய்த செயலாக தெரிகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் என்றும் அதிமுக விசுவாசிதான் என புகார் மனுவில் கூறியுள்ளார்.
கட்சியில் இருக்கிறீர்களா?
புகாரை அளித்துவிட்டு வெளியே வந்த மனோபாலாவிடம் செய்தியாளர்கள் ஏன் அதிமுக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை? கட்சியில் இருக்கிறீர்களா என்று கேட்டனர்.
நான் அதிமுக விசுவாசி,என்னை நம்புங்க
அதற்கு பதிலளித்த மனோபாலா, நான் என்றும் அதிமுக விசுவாசிதான் நம்புங்க. நான் பொதுக்குழு செயற்குழு உறுப்பினராக இல்லை. நான் ஒரு நட்சத்திர பேச்சாளர் அவ்வளவுதான். எங்களைப் போன்றவர்கள் 44 பேர் நடிகர் குண்டுகல்யாணம் தலைமையில் சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்துவிட்டு வந்தோம் என்றார்.