ஜாமீன் மனு தள்ளுபடியை தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் நடிகர் மன்சூர் அலிகான் உண்ணாவிரதம்!
சேலம் மத்திய சிறையில் நடிகர் மன்சூர் அலிகான் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
சேலம்: சேலம் மத்திய சிறையில் நடிகர் மன்சூர் அலிகான் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர்அலிகான் அண்மையில் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் சேலத்தில் எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது. எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.
மத்திய, மாநில அரசுகள் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என பேசினார்.
வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் ஓமலூர் நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
அவரது மனுவை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சேலம் மத்திய சிறையில் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.