2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என ஆளுநர் உறுதி- நாசர் தகவல்- Exclusive
இன்னும் 2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உறுதி அளித்தார் என நாசர் தெரிவித்தார்.
சென்னை: இன்னும் 2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உறுதி அளித்தார் என நடிகர் நாசர் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஆளுநர் பன்வாரிலால் உறுதியளித்திருந்தார். இந்நிலையில் ஆளுநரை முதல்வரும், துணை முதல்வரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தித்தனர்.
அப்போது காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் தமிழக அரசு தொடர்ந்த சீராய்வு மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.
5000 பேர் பங்கேற்பு
இந்நிலையில் நடிகர் சங்கத்தினர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர் ஆளுநரை சந்தித்து விட்டு வெளியே வந்த நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் சந்திப்பு குறித்து ஒன்இந்தியா தமிழ் செய்தியாளர் கேட்டபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திரையுலகம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் 5000 பேர் கலந்து கொண்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம்
அவர்கள் கையெழுத்திட்டு கொடுத்த மனுவை ஆளுநரிடம் அளித்தோம். அதுகுறித்து முதல்வருக்கு குறிப்பு அனுப்புவதாக ஆளுநர் தெரிவித்தார். இன்னும் 2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றும் அவர் கூறினார் என்றார் நாசர்.
முதலில் பார்ப்போம்
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அரசு காலம் கடத்தி வருகிறதே .இதை எதிர்த்து என்ன போராட்டம் நடத்தப் போகிறீர்கள் என்று நாசரிடம் கேட்டபோது, முதலில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். பிறகு போராட்டம் குறித்து முடிவெடுப்போம்.
நல்லவிதமான நடவடிக்கை
தீர்வு நல்லதாக அமையும் என்றே நம்புகிறேன். நல்ல தீர்வு காணத்தான் போராட்டமும் நடத்தினோம். நல்லவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் நாசர்.