சென்னையில் அனுமதியின்றி குட்டி விமானம் பறக்க விட்ட நடிகர் பாண்டியராஜன் மகன் கைது
சென்னை: சென்னையில் அனுமதியின்றி குட்டி விமானம் பறக்க விட்டதாக நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரேமராஜனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆண் பாவம், மனைவி ரெடி உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தந்தவர் பாண்டியராஜன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட பாண்டியராஜனுக்கு, பல்லவ ராஜன், ப்ரித்வி ராஜன், பிரேமராஜன் என மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் ப்ரித்விராஜன் நடிகராக உள்ளார்.
இந்நிலையில், நேற்று சென்னை மைலாப்பூர் பகுதியில் பாண்டியராஜனின் இரண்டாவது மகன் பிரேமராஜன் அனுமதி பெறாமல் குட்டி விமானத்தை பறக்க விட்டுள்ளார்.
உடனடியாக இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், விரைந்து வந்து பிரேமராஜனைக் கைது செய்தனர். அவரிடமிருந்த குட்டி விமானமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர், சிறிது நேரத்தில் பிரேமராஜன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.