சசிகலா அடைக்கப்பட்டுள்ள ஜெயிலுக்கு கூடுதல் "பவர்"!
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மோச வழக்கில் கைதாகி பவர் ஸ்டார் சீனிவாசன் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கண்ணா லட்டு திங்க ஆசையா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல கோடி ரூபாய் மோசடி செய்தாக சென்னை, டெல்லி உள்ளிட்ட நீதிமன்றங்களில் அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு குறைந்த வட்டியில் வங்கியில் ரூ.500 கோடிக்கடன் வாங்கி தருவதாக கூறி 10 கோடி ரூபாயை அவர் கமிஷனாக பெற்றதாக கூறப்படுகிறது.
மோசடி செய்த பவர்ஸ்டார்
கமிஷனை பெற்றுக்கொண்ட பவர் ஸ்டார் வங்கியில் இருந்து அந்த நிறுவனத்துக்கு கடன் பெற்று கொடுக்காததோடு, கமிஷன் தொகையையும் திரும்ப கொடுக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளிய வந்தார் பவர் ஸ்டார்.
திகார் சிறையில் அடைப்பு
ஆனால் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும் டெல்லி கோர்ட்டில் அவர் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதம் மீண்டும் பவர்ஸ்டார் சீனிவாசன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெங்களூரிலும் மோசடி
இந்த நிலையில், பெங்களூரு தொழில்அதிபர் மன்சூர் ஆலம், அவருடைய தம்பி சாஜத் வாகப் ஆகியோருக்கு வங்கியில் ரூ.30 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.1 கோடியை ‘பவர்ஸ்டார்‘ சீனிவாசன் மோசடி செய்ததாக பெங்களூரு காவல்நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரப்பன அக்ரஹார சிறையில்..
இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லி போலீசார் அவரை நேற்று பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், 15 நாள் நீதிமன்ற காவலில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.
சசிகலாவும் அங்குதான்..
சிறையில் அடைக்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசனிடம் பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தலாம் என கூறப்படுகிறது. பவர் ஸ்டார் தற்போது அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹார சிறையில்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி சசிகலாவும் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.