நாளிதழில் எழுதிய தொடருக்கு முட்டுக்கட்டை.. 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என பிரகாஷ் ராஜ் கண்டனம்
கன்னடத்தில் தான் எழுதி வந்த தொடரை திடீரென நிறுத்தியது சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: கன்னடத்தில் பிரகாஷ்ராஜ் எழுதி வந்த தொடர் திடீரென நிறுத்தப்பட்டது எழுத்துரிமை மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் தனது நண்பர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கு நடைபெற்றது முதல் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். மேலும் தாஜ்மகால் உலக அதிசய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு அவரது தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
விவசாயிகள் பிரச்சினை, கந்து வட்டி பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக் காட்டி டுவிட்டரில் கருத்து தெரிவித்து வரும் அவர் சிலவற்றை கன்னட பத்திரிகைகளில் தொடராகவும் எழுதி வந்தார்.
|
சர்ஜிக்கல் ஸ்டிரைக்
இந்நிலையில் ஒரு பத்திரிகைக்கு தான் எழுதிய தொடர் திடீரென நிறுத்தப்பட்டதற்கு டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், எழுத்துரிமை மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக். நான் எழுதி வந்த தொடர் திடீரென நிறுத்தப்பட்டதன் பின்புலத்தில் கண்ணுக்கு தெரியாத கைகள் உள்ளன.
கண்ணுக்கு புலப்படாத கைகளுக்கு சொந்தங்களே...
தொடர் நிறுத்தப்பட்டதற்கு பின்புலத்தில் உள்ள கைகளுக்கு சொந்தகாரர்களே, நீங்கள் அணிந்துள்ள முகவரிக்கு பின்னால் உள்ள உங்கள் முகத்தை மக்கள் புரிந்து கொண்டார்கள். கன்னட வாசகர்களுடன் நான் எழுதும் தொடரை முடக்குவதன் மூலம் அவர்களுடனான உறவை பிரிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா.
ஹேஷ்டேக் வைத்தே...
நடிகர் பிரகாஷ் ராஜ் தான் கேட்கும் அனைத்து கேள்விகளையும் #justasking என்ற ஹேஷ்டேக் கொண்டே கேட்கிறார். இதை அவர் தனது டிரேட்மார்க்காகவே பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரகாஷ் ராஜ் விளக்கம்
கர்நாடகாவை கன்னடர்கள் தான் ஆள வேண்டும் என கூறியதாக வெளியான தகவலுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த ஒருவர் நாட்டின் எந்த மாநிலத்திற்கும் தலைவராகலாம் என்பதே ஒரு இந்தியனாக தனது நிலைப்பாடு என நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தார்.