ரஜினி கர்நாடகாவில் அரசியல் செய்யட்டும், தமிழகத்தை ஆள தமிழர்கள் இருக்கிறார்கள்... ராதாரவி கடுகடு!
ரஜினி கர்நாடாவில் அரசியல் செய்யட்டும் தமிழகத்தை ஆள தமிழர்கள் இருக்கிறார்கள் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ரஜினி என்னுடைய நெருங்கிய நண்பர்,அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. ஒருவேளை அரசியலுக்கு வந்தால் அவர் கர்நாடகாவில் போய் அரசியல் செய்யட்டும், தமிழத்தை ஆள தமிழர்கள் இருக்கிறார்கள் என்று நடிகர் ராதாரவி காட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராதாரவி நடிகர்கள் ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பேட்டியில் அவர் கூறியதாவது : கமல் அரசியல் கட்சி தொடங்குவதாக சொல்வது நல்ல விஷயம் தானே. களத்தில் இறங்கினால் தான் தெரியும். கமல் பேசுவது சிக்கலாக இருக்கிறது. டிகிரி படித்தவர்களுக்கு மட்டுமே புரியும் அந்த அளவிற்கு பேசுகிறார்.
எனக்கு கமல் பேசுவது புரியவில்லை, அவர் என்னுடைய நிறம் கருப்பு காவியல்ல என்று கலர்லயே பேசுகிறார். மொத்தமே 7 கலர் தான் அதுல என்ன பேசப் போகிறார் என்று தெரியவில்லை.
உண்மையை தோண்டி எடுப்பார்களே
ரஜினி என்னுடைய நல்ல நண்பர். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் குரல் கொடுப்பார்கள். ஆனால் ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரைப் பற்றி தோண்டி எடுப்பார்கள் இல்லையா.
ரஜினி சர்ச்சையில் சிக்க வேண்டுமா
இப்போதும் கூட ஒரு நடிகரை அவர் கிறிஸ்தவர் என்றெல்லாம் தோண்டவில்லையா. ரஜினி நல்ல மனிதர் என்னுடைய நல்ல நண்பர் அதனால் அவர் இது போன்ற சர்ச்சைகளில் எல்லாம் சிக்க வேண்டுமா என்று நான் கவலைப்படுகிறேன்.
கட்சி வேண்டாம் ரஜினி
ரஜினி கட்சி ஆரம்பிக்காமல் இருந்தால் நல்லது என்று சொல்வேன். ஆனால் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், யார் வேண்டுமானாலும் வரலாம்.
தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்
இது தான் தமிழ்நாட்டின் தலையெழுத்து என்றால் மாற்ற முடியுமா என்ன மாற்ற முடியாது. இந்தியை உள்ளே கொண்டு வருவது நல்லது என்று அவர்கள் நினைக்கலாம். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் விடாமல் மத்திய அரசு தடை செய்வது நல்லது என்று அவர்கள் நினைக்கலாம்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதரவு
பசுவதை தடைச்சட்டம் நல்லது என்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதால் அது நல்லது என்று நினைக்கலாம். நீட் தேர்வு மத்திய அரசு கொண்டு வருகிறது, இதை இனிமேல் ரஜினி, கமல் ஏன் நான் கூட எழுதப் போவதில்லை அதனால் அது நல்லது என்று நினைக்கலாம்.
கர்நாடகாவுல கட்சி தொடங்குங்க
ரஜினிக்கும், கமலுக்கும் மக்கள் மீதே நல்ல அபிமானம் இல்லை என்று நான் நினைக்கிறேன். ரஜினி இங்கு காலத்தை விரயம் செய்யாமல் கர்நாடகாவில் அரசியல் கட்சி தொடங்கினால் அவருக்கு நான் ரொம்ப ஆதரவு தெரிவிக்கிறேன் என்றும் ராதாரவி கூறியுள்ளார்.