அமைச்சர்கள் சும்மா இருக்க வேண்டும்.. சசிகலாவை பாராட்ட வேண்டும்.. ராதாரவி சீண்டல்
நடிகர் ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என்று கூறிய போது வாய்மூடி இருந்த அமைச்சர்கள் நடிகர் கமல்ஹாசனை விமர்சிப்பது முறையல்ல என்று நடிகர் ராதாரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தருமபுரி : நடிகர் ரஜினிகாந்த் விமர்சித்த போது வாய்மடி இருந்த அமைச்சர்கள் நடிகர் கமல்ஹாசனை விமர்சிப்பது ஏன் என்று நடிகர் ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராதாரவி, நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்தித்த போது அவர்கள் மத்தியில் பேசும் போது ஸ்டாலின், திருமாவளவன், சீமான் போன்ற நல்ல அரசியல் தலைவர்கள் இருந்தாலும் சிஸ்டம் சரியில்லை என்று கூறியிருந்ததை சுட்டிக்காட்டினார். அப்போது எந்த விமர்சனத்தையும் அமைச்சர்கள் முன் வைக்கவில்லை.
ஆனால் இப்போது நடிகர் கமல்ஹாசன் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது என்று கூறியதற்கு அமைச்சர்கள் விமர்சனங்களை முன்வைப்பது சரியானது அல்ல. வாக்களிப்பவர்கள் அனைவருக்கும் கேள்வி கேட்கும் உரிமை உள்ளது, அதே போன்று நடிகர் கமல்ஹாசனுக்கும் கேள்வி கேட்கும் உரிமை உள்ளது.
தமிழகத்தில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஊழல் இருக்கிறது என்பதை சசிகலா நிரூபித்துள்ளார். அவரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும் என்றும் ராதாரவி கூறியுள்ளார்.