ரஜினியின் அரசியலில் புதுமை இருக்க வாய்ப்பே இல்லை!
ரஜினியின் நேற்றைய பேச்சு அவரது அரசியலில் புதுமை இருக்க வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையிலேயே இருந்தது.
Recommended Video
சென்னை: ரஜினியின் நேற்றைய பேச்சு அவரது அரசியலில் புதுமை இருக்க வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையிலேயே இருந்தது.
ஏசி சண்முகத்துக்கு சொந்தமான எம்ஜிஆர் கல்வி நிறுவனத்தின் 30வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அங்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் வெண்கல சிலை திறக்கப்பட்டது.
இதனை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். கல்வி நிறுவனத்தின் 30வது ஆண்டு விழா மேடை, அரசியலில் ரஜினியை முன்னிறுத்தும் மேடையாகவே இருந்தது.
வழக்கமான அரசியல்
இதுவரை இல்லாத ரஜினியின் நேற்றைய பேச்சு அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ளது. ஆனால் ரஜினியின் நேற்றைய பேச்சு அவரது அரசியலும் வழக்கமான அரசியல்வாதிகளை போலவே இருக்கும் என்பதற்கு சான்றாகியுள்ளது.
தனிமனித வழிபாடு
வழக்கமான கட்சிகளைப் போலவே துதி பாடும் கூட்டம் ரஜினி்யைச் சுற்றி உள்ளது. இதற்கான சான்று நேற்றைய கூட்டம். தனி மனித வழிபாடு ரஜினி கட்சியில் நிச்சயம் ஓங்கியிருக்கும். இதற்கும் நேற்றைய கூட்டமே சான்று.
எம்ஜிஆர், ஜெ
வழக்கமாக கட்சிகள் வைப்பது போலவே பேனர்கள், கட் அவுட்கள், மக்களைப் பாதிக்கும் வகையிலான படோடபங்கள் ரஜினி தொண்டர்களிடமும் உள்ளது. எப்படி எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் அதிமுகவினர் இருந்தார்களோ அதேபோலத்தான் ரஜினியிடமும் அவரது கட்சியினர் இருக்க வாய்ப்புள்ளது.
இதுவரை சொல்லவே இல்லை
அதாவது சுயாதீனமாக யாரும் இயங்க முடியாது. ரஜினியைத் தாண்டி யாரும் வருவதற்கான வாய்ப்பில்லை. வழக்கமான அரசியல்வாதிகள் போலத்தான் ரஜினியும் பேசுகிறார். அதாவது வழக்கமான அரசியலைத்தான் அவரும் பேசுகிறார். புதுமையான விஷயத்தை அவர் இதுவரை சொல்லவே இல்லை.
தன்பக்கம் வசீகரிக்க
ஆன்மீக அரசியல் என்பதற்கு அவர் கொடுத்துள்ள விளக்கம் நேரடியாக இருந்தாலும் கூட இன்னமும் புரியாமலேயே உள்ளது.
தான் செய்யப்போகும் புதுமை என்ன என்பதையும் அவர் இதுவரை சொல்லவில்லை. நேற்றைய கூட்டத்தை அவர் அதிமுக உள்ளிட்ட பிற கட்சியினரை தன் பக்கம் வசீகரிக்க எடுத்துக் கொண்ட முயற்சியாகவே பார்க்கத் தோன்றுகிறது.
இதுவே முதல்முறை
மாறாக, தமிழகத்தின் பிரச்சினைகளை அவர் திரும்பிக் கூட பார்க்கவில்லை. ரஜினியின் நேற்றைய பேச்சு இதுவரை இல்லாத வெளிப்படையான பேச்சு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 25 வருடங்களில் அவர் இதுபோல பேசியிருப்பது இதுவே முதல் முறை.
பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்
இவ்வளவு நீண்ட நேரம் பேசியிருப்பதும் இதுவே முதல் முறை. ஆனால் மக்களின் எதிர்பார்ப்புகளும், இந்த மாநிலத்தின் தேவையும் மிகப் பெரியவை. அதை பூர்த்தி செய்யும் வகையில் அவரது அரசியல் இருக்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.