“நேரம் வரும்போது சந்திப்போம்”... இலங்கை ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் உருக்கமான நன்றி கடிதம்
இலங்கை ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், நேரம் கூடி வரும் போது சந்திப்போம் என்றும் அவர் உருக்கமாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: இலங்கை விழாவிற்கு செல்ல முடியாத சூழலில், அங்குள்ள ரசிகர்களுக்கு நன்றி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்.
இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் நிகழ்ச்சி வவுனியாவில் வரும் 10ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டனர்.
பயணம் ரத்து
இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். ஆனால் அவர் இலங்கைக்கு வர வேண்டும் என்று கோரி இலங்கையில் போராட்டம் நடைபெற்றது.
தலைவர்கள் நன்றி
வேண்டுகோளை இலங்கை பயணத்தை உடனடியாக ரத்து செய்த ரஜினிகாந்த்திற்கு விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கூட்டாக நேற்று நன்றி தெரிவித்தனர்.
ரஜினி கடிதம்
இந்நிலையில், இலங்கை ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் "நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
உருக்கம்
"நேரம் கூடிவரும் போது நாம் நேரில் சந்திப்போம்" என்றும் ரஜினிகாந்த் உருக்கமாக கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை ரசிகர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் ரஜினிகாந்த்.