"நலமாக இருக்கிறேன்"- வீரப்பன் பிடியில் இருந்த ராஜ்குமார் கேசட்டில் தகவல்
Recommended Video
சென்னை: நான் நலமாக இருக்கிறேன் என்றும் ரசிகர்கள் யாரும் கலவரத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் நடிகர் ராஜ்குமார் பேசிய கேசட் ஒலிபரப்பபானது.
நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை வீரப்பன் கூட்டாளிகள் கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி கடத்திச் சென்றனர். சத்தியமங்கலம் வனப்பகுதியில் அவர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
வீரப்பனை நேரில் சந்தித்துப் பேசி கடத்தப்பட்டவர்களை மீட்டு வருவதற்காக, தமிழக-கர்நாடக அரசுகளின் தூதுவராக நக்கீரன் வாரப் பத்திரிகை ஆசிரியர் கோபால் காட்டுக்குச் சென்றார். இந்த நிலையில் ராஜ்குமார் பேசிய ஆடியோ கேசட் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மகன்களிடம் போட்டு காண்பிப்பு
கோபால் மூலம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கேசட் ஒப்படைக்கப்பட்டது. கேசட்டில் பேசியிருப்பது ராஜ்குமார்தானா என்பது, சென்னையில் தங்கியுள்ள ராஜ்குமாரின் மகன் மற்றும் நடிகருமான சிவராஜ்குமாரிடம் போட்டுக் காட்டி உறுதி செய்யப்பட்டது.
கலவரம்
கேசட்டில் பேசியுள்ள ராஜ்குமார், நான் நலமாக இருக்கிறேன். வீரப்பன் என்னை சொந்த சகோதரன் போல் கவனித்துக் கொள்கிறார். யாரும் கலவரத்தில் ஈடுபட வேண்டாம். கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். நீங்கள் கலவரத்தில் ஈடுபட்டால் அது எனக்குத்தான் ஆபத்தாக முடியும்.
[18 ஆண்டுகளுக்கு முன்.. 108 நாட்கள்... வீரப்பன் பிடியில் சிக்கித் தவித்த ராஜ்குமார்! ]
வேகமாக நிறைவேற்ற
எனவேஅனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கூறியிருந்தார். வீரப்பனின் மனதில் ஏதோ உள்ளது. அது என்ன என்பதை அறிந்து, அவரது கோரிக்கை என்ன என்பதை கேட்டு அதை எவ்வளவு விரைவில் நிறைவேற்ற முடியுமோ, அவ்வளவு வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்று கர்நாடக, தமிழக அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
ரசிகர்களுக்கு வேண்டுகோள்
கர்நாடகத்தில், தமிழர்கள், தெலுங்கர்கள் என பல தரப்பினரும் உள்ளனர். அவர்கள் அனைவரும் சகோதரர்கள் போல வாழ வேண்டும். எனவே,அவர்களுக்கு எந்தத் தொந்தரவையும் கன்னட மக்களும், எனது ரசிகர்களும் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
வீரப்பன் பேச்சு
நான் இங்கு எந்தத் தொந்தரவும் இன்றி நன்றாகவே இருக்கிறேன் என்று கூறியிருந்தார். கேசட்டின் மறு பக்கத்தில் வீரப்பனும் பேசியுள்ளார். முதலில் அனுப்பிய கேசட்டில் கூறியிருந்ததையே அதிலும் கூறியுள்ளார்.
கோபாலுக்கு தரப்பட்டது
கேசட் முதலில் சத்தியமங்கலம் காட்டிலிருந்து, வீரப்பனின் கூட்டாளிகள் மூலம் கோபாலுக்குத் தரப்பட்டுள்ளது. அங்கிருந்து ஜெயம்கொண்டம் அனுப்பப்பட்டது. பிறகு பாண்டிச்சேரிக்கும்,அதன் பிறகு சென்னைக்கும் சென்றுள்ளது. 2000-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ஆம்தேதி இரவுதான் கேசட் கருணாநிதியை அடைந்தது.