நான் நல்லா இருக்கேன்.. மதுரைல இருக்கேன்... ‘நெஞ்சுவலி’ வதந்தி குறித்து ராமராஜன் விளக்கம்
நடிகர் ராமராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் வெளியான தகவல் வதந்தி எனத் தெரிய வந்துள்ளது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் மனக் கவலையடைந்த நடிகர் ராமராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வதந்தி எனத் தெரிய வந்துள்ளது.
தமிழின் முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். பின்னர் அவர் அரசியலில் குதித்தார். கடந்த 1998ல் திருச்செந்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ராமராஜன் எம்.பி., ஆனார். தொடர்ந்து அதிமுகவில் அவர் உறுப்பினராக உள்ளார்.
இந்த சூழ்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதனால் பெரும் மனக்கவலையில் இருந்த ராமராஜனுக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது முன்னாள் மனைவி நளினி அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதாகவும் கூறப்பட்டது.
இந்தத் தகவலால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். ராமராஜன் மற்றும் நளினிக்கு அவர்கள் போன் போட்டு விசாரிக்கத் தொடங்கினர். அப்போது தான் இது வதந்தி என்பது தெரிய வந்தது.
அதாவது ராமராஜன் தற்போது ஆரோக்கியமாக உள்ளார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக தற்போது அவர் மதுரை சென்றுள்ளாராம்.
அவ்வப்போது இது போன்று பிரபலங்கள் சிலருக்கு உடல்நலக் குறைவு அல்லது மரணம் என சமூகவலைதளங்களில் வதந்தி பரப்புவதை சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அந்தவகையில் தற்போது ராமராஜன் அந்த வதந்தியில் சிக்கியுள்ளார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
நடிப்பில் உச்சத்தில் இருந்தபோது நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ராமராஜன். இந்தத் தம்பதிக்கு அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 2000ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி விவாகரத்து செய்து கொண்ட ராமராஜனும், நளினியும் பிரிந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.