தோட்டாவுடன் ஏர் போர்ட்டுக்கு வந்த நடிகர் கார்த்திக்கின் அண்ணன்... கைதாகி விடுதலை
மதுரை: துப்பாக்கித் தோட்டாக்களை எடுத்து வந்ததற்காக நடிகர் கார்த்திக்கின் அண்ணனை மதுரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
அக்னி நட்சத்திரம், அமரன் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகர் கார்த்திக். இவரது சகோதரர் கணேஷ் (57), நேற்று மாலை மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்தார்.
அங்கு மத்திய பாதுகாப்புப் படை போலீசார் நடத்திய சோதனையில், அவரது பையில் தோட்டா ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், தான் நடிகர் கார்த்திக்கின் சகோதரர் என்றும், போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டிற்குச் செல்வதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தப்பை தன்னுடையதில்லை என்றும், உறவினருடையது என்றும் கூறிய அவர் அதில் தோட்டா இருப்பது தெரியாது என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கார்த்திக்கிற்கும் போனில் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசாரைத் தொடர்பு கொண்ட கார்த்திக், ‘அந்த பை என்னுடையது; துப்பாக்கி, தோட்டாக்களுக்கு உரிமம் உள்ளது' என விளக்கமளித்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், ஆவணங்களின்றி தோட்டா எடுத்து வந்ததற்காக கணேஷைப் பெருங்குடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் இரவு விமானத்தில் சென்னை புறப்பட்டுச் சென்றார்.