தாக்குதல் வழக்கில் சிக்கிய நடிகர் சந்தானம் தலைமறைவு.. முன் ஜாமீன் கேட்டு ஹைகோர்ட்டில் மனு
Recommended Video
சென்னை: வழக்கறிஞரை தாக்கிய புகாரின் பேரில் நடிகர் சந்தானம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தலைமறைவாகிவிட்ட அவர் முன் ஜாமீன் கேட்டு ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், பிரேம் ஆனந்த் என்ற வழக்கறிஞரை நடிகர் சந்தானம் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
நகைச்சுவை நடிகர் சந்தானம், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கண்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் சேர்ந்து முன்றாம் கட்டளையில் திருமண மண்டபம் கட்டுவதற்காக 3 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்ததாக தெரிகிறது.
வழக்கறிஞருடன் சந்தானம் தகராறு
பணத்தை பெற்று கொண்ட நிறுவனத்தின் மேலாளர் சண்முக சுந்தரம் 3 வருடமாக மண்டபத்தை கட்டிக்கொடுக்வில்லை. இந்த பணப் பிரச்சினை பற்றி பேசும் நோ்கத்தில், சண்முக சுந்தரத்தை பார்க்க சந்தானம் சென்றுள்ளார். அப்போது அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரம் அங்கு வந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவர் சண்முக சுந்தரத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார். எனவே அவருடனும் சந்தானம் தகராறு செய்துள்ளார்.
வக்கீல் மூக்கை உடைத்த சந்தானம்
அப்போது பிரேம் ஆனந்தை சந்தானம் அடித்துள்ளார். இதனால் அவர் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. நடிகர் சந்தானத்தால் தாக்கப்பட்ட வழக்கறிஞர் பாஜக தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவராகும். தகவல் அறிந்ததும், பாஜகவினர் வளசரவாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க கோஷமிட்டனர்.
சந்தானம் தலைமறைவு
இதனிடையே காயமடைந்த, வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதேநேரம் சந்தானம், சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும், அதன்பிறகு அவர் குறித்து தகவல் இல்லை எனவும் கூறப்படுகிறது. போலீசாரின் பிடி இறுகுவது தெரிந்ததும், சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலிருந்து திடீரென சந்தானம் கிளம்பி எங்கே தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
சந்தானம் மீது வழக்குப்பதிவு
சந்தானம் மீது வளசரவாக்கம் போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சண்முகசுந்தரம், பிரேம் ஆனந்த் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான சந்தானத்தை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். இந்நிலையில், போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப, ஹைகோர்ட்டில், சந்தானம் சார்பில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.