பாஜக நிர்வாகியை தாக்கியதாக நடிகர் சந்தானம் மீது போலீசில் புகார்- தமிழிசை கண்டனம்
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் நடிகர் சந்தானம் தாக்கியதாக பாஜக பிரமுகரும் கட்டிட காண்ட்ராக்டருமான சண்முக சுந்தரம் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பண விவகாரத்தில் ஆத்திரமடைந்து கட்டுமான நிறுவன உரிமையாளர் சண்முக சுந்தரம் என்பவரை தாக்கியதாக நடிகர் சந்தானம் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக பிரமுகரைத் தாக்கியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் சந்தானம். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் சந்தானம். இவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்,40. இவர் அதே பகுதியில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கட்டிடங்கள் கட்டி விற்பனை செய்து வருகிறார்.
நடிகர் சந்தானமும், சண்முக சுந்தரமும் சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு போரூரை அடுத்துள்ள மூன்றாம்கட்டளை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தை வாங்கி அதில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்துள்ளனர். ஒப்பந்தத்தின்படி சந்தானம் சண்முகசுந்தரத்திடம் பெரிய தொகை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சண்முகசுந்தரம் கட்டுமானப் பணியைத் தொடங்காமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சந்தானம் பலமுறை சண்முகசுந்தரத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் சரியான பதில் கூறவில்லையாம்.
இந்நிலையில் சண்முகசுந்தரத்திற்கும் சந்தானத்திற்கும் இடையே பணத்தகராறு இருந்து வந்த நிலையில் நேற்று மாலை சந்தானம் தனது மேனேஜர் ரமேஷ் உடன் வளசரவாக்கத்தில் உள்ள சண்முகசுந்தரம் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. அப்போது இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கி கொண்டதாகவும் மோதலில் அவர்கள் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த சந்தானம் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகத் தெரிகிறது. இதற்கிடையே நடிகர் சந்தானம் தன்னை தாக்கியதாக வளசரவாக்கம் போலீசில் சண்முக சுந்தரம் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ஆல்பின்ராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
நடிகர் சந்தானமும், சண்முகசுந்தரமும், ஒருவர் மீது மற்றொருவர் மாறி மாறி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே காயமடைந்த சண்முகசுந்தரமும், பிரேம்ஆனந்தும் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சந்தானமும், அவரது மேனேஜரும் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சண்முக சுந்தரம் பாஜக பிரமுகராக இருக்கிறார்.சந்தானம் சிசிக்சை பெற்று வந்த மருத்துவமனையை பாஜக பிரமுகர்கள் சிலர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் சந்தானத்தால் பாஜக பிரமுகர் தாக்கப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.