தலைமறைவான நடிகர் சந்தானம் முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனுத் தாக்கல்!
நடிகர் சந்தானம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: ஒப்பந்ததாரரை தாக்கிய வழக்கில் முன் ஜாமீன் கோரி நடிகர் சந்தானம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.
திருமண மண்டபம் கட்டுவதற்காக கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் சண்முகசுந்தரத்திடம் ரூ3 கோடி முன்பணம் கொடுத்திருந்தாராம் நடிகர் சந்தானம். ஆனால் திட்டமிட்டபடி சண்முகசுந்தரம் திருமண மண்டபத்தை கட்டிக் கொடுக்கவில்லை என்பது சந்தானம் தரப்பின் புகார்.
இது தொடர்பாக சண்முகசுந்தரத்துடன் சந்தானம் நேரில் பேசியிருக்கிறார். அப்போது இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதில் சண்முகசுந்தரத்தின் வழக்கறிஞர் பிரேம் ஆனந்துக்கு மூக்கு உடைந்தது. பிரேம் ஆனந்த் பாஜக பிரமுகர் என்பதால் அக்கட்சி தொண்டர்கள் வளவரசவாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இது தொடர்பாக இருதரப்பு மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து நடிகர் சந்தானம் திடீரென தலைமறைவானார்.
இதனிடையே தமக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சந்தானம் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.