கிழிஞ்சது கிருஷ்ணகிரி.. டிடிவி தினகரனுக்கு ச.ம.க திடீர் ஆதரவு.. தேர்தல் வரையாவது தொடருமா சரத் சார்?
அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத் குமார் திடீரென ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனது கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தென்காசி தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கடந்த சட்டசபை தேர்தலின்போதும் கூட்டணி அமைத்தார்.
எனினும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா நிபந்தனை போட்டார். அதன்படி திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வி அடைந்தார்.
அதிமுக பிளவு
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக பிளவுப்பட்டது. சிறிது காலம் கழித்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக பேசி வந்தார்.
திமுகவுக்கு ஆதரவு
ஆர்.கே.நகருக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அவர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக செயல்படுவார் என்று நம்பப்பட்டது. திடீரென திமுகவுக்கும் ஆதரவாக பேசிவந்தார். பின்னர் ஆர்.கே.நகரில் தனித்து போட்டி அமைக்கப் போவதாக அறிவித்து வேட்பாளரை இறக்கினார்.
வேட்புமனு ஏற்கவில்லை
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சற்று ஒதுங்கியே இருந்த சரத்குமார், திடீரென அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்துக்கு இன்று சென்றார்.
தினகரனுக்கு ஆதரவு
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் முன்னிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளதாக சரத்குமார் அறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவிக்கையில், யார் மீதும் எனக்கு எந்த கோப தாபமும் இல்லை. பிரிந்துள்ளவர்கள் சேர வேண்டும் என்பதே எனது விருப்பம், தினகரன் அமோகமாக வெற்றி பெறுவார். எந்த ஒரு சூழலிலும் மற்றவர்கள் புகுந்து கட்சியை கலைத்துவிடக் கூடாது. ஜெயலலிதாவின் நல்லாட்சி மலர வேண்டும் என்று சரத்குமார் தெரிவித்தார்.
ஆர்.கே.நகரில் கணிசமாக நாடார் வாக்குகள் உள்ள நிலையில், சரத்குமாரை இழுப்பதில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.