தமிழிசை என்னை பார்த்து பயப்பட வேண்டாம்... நான் வெறும் அப்பா நடிகர் என சத்யராஜ் கேலி!
நான் வெறும் அப்பா கேரக்டரில் நடிப்பவன் என்னை பார்த்து பயப்பட வேண்டாம் என்று நடிகர் சத்யராஜ் தமிழிசை சவுந்திரராஜனுக்கு தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : பாஜக தலைவர் தமிழிசை சொன்னது போல வருமான வரி சோதனை வந்தால் அதற்காகப் பயமில்லை என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். தமிழிசை என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம் நான் வெறும் அப்பா கதாபாத்திரத்தில் திரைப்படங்களில் நடிப்பவன் அரசியலுக்கு வரும் விருப்பம் எனக்கு இல்லை என்றும் நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் சத்யராஜ் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : நான் ஒரு சாதாரண நடிகர், ஏதோ அப்பா வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். 40 வருடங்களாக நான் நடித்துக் கொண்டிருக்கிறேன், இதுவரை வருமான வரித்துறை சோதனை வந்ததில்லை.
நடிக்க வந்த முதலில் கூட ஏதாவது தவறு செய்திருப்போம், இப்போது முன்பைவிட உஷாராக(நேர்மையாக) இருக்கிறேன். என்னை மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்பட அனைவருக்கும் சொல்கிறேன் என்னைப் பார்த்து யாரும் பயப்படத் தேவையில்லை.
தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறேன்
எனக்கு அரசியல் சம்பந்தமான எந்த கனவும் கிடையாது. தமிழர்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது பிரச்னை வந்தால் குரல் கொடுக்க வேண்டியது என்னுடைய கடமையாக நினைத்து நான் குரல் கொடுக்கிறேன்.
களத்தில் போராடுவோம்
முன்னாடி நின்று விரல் சொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அரசியலுக்கு வரும் எண்ணம் என்னிடம் இல்லை, என்னைவிட சிறந்த தலைவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். எல்லா கட்சித் தலைவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து களத்தில் இறங்கிப் போராடுவோம்.
நடிகனால் போராட முடியாது
ஒரு நடிகனால் அந்த அளவிற்கு இறங்கிப் போராட முடியாது. நடிகனின் மனநிலை என்னவென்று எனக்கு தெரியும் 40 ஆண்டுகளாக நான் திரைத்துறையில் இருப்பதால் இதை உறுதியாக சொல்ல முடியும். பாரதிராஜா, செல்வமணி போன்றோர் பின்னால் நிற்கத் தான் நான் ஆசைப்படுகிறேனே தவிர தலைமை ஏற்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை.
என்னைப் பார்த்து பயம் வேண்டாம்
ஒரு பிரபலமான நடிகனாக இருப்பதால் முன்னால் நிற்கும் தகுதி எனக்கு இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். என் தகுதி என்னவென்று எனக்கு தெரியும். உண்மையான களப்போராளிகளுக்கு பின்னால் நிற்கத் தான் நான் விரும்புகிறேன். எனவே ஒரு மாபெரும் அரசியல் தலைவர் அப்பா வேடத்தில் நடிக்கும் என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம். உடல் ஆரோக்கியத்திற்கு விளையாட்டுப் போட்டிகள் அவசியம் தான். ஆனால் உரிமைக்கான போராட்டத்தில் இளைஞர்கள் இருக்கும் போது இந்த ஐபிஎல் போட்டி இங்கு வேண்டாம்.
திசைதிரும்பி விடக்கூடாது
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு இளைஞர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், இளைஞர்களிடையே இருந்த சலிப்புக்கு மத்தியில் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றது. அதே வேகத்தில் இளைஞர்கள் தற்போது காவிரிக்காக போராடி வருகின்றனர். கிரிக்கெட்டிற்கு நான் எதிரானவன் அல்ல, இளைஞர்களின் போராட்ட கவனம் திசை மாறிவிடக்கூடாது. அதற்காகத் தான் இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று வலியுறுத்துகிறேன் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
சத்யராஜை விமர்சித்த தமிழிசை
நேற்றைய நடிகர் சங்க உண்ணாவிரதத்தின் போது நடிகர் சத்யராஜ், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக ராணுவமே வந்தாலும் அஞ்சாமல் போராடுவோம் என்றார். இதற்கு பதிலளித்த தமிழிசை, ராணுவம் வேண்டாம், வருமான வரி சோதனை வந்தாலே நீங்கள் பயப்படுவீர்கள் என்று கூறி இருந்தார்.