குரங்கணி தீவிபத்து இயற்கையானதா?: சந்தேகம் கிளப்பும் சத்யராஜ்
குரங்கணியில் நடைபெற்ற காட்டுத் தீ இயற்கையானதா என்று சத்யராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை: தேனி மாவட்டம் குரங்கணியில் நடைபெற்ற காட்டுத் தீ இயற்கையானதா என்று நடிகர் சத்யராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
குரங்கணி மலைப் பகுதிக்கு 36 பேர் கொண்ட குழுவினர் மலையேற்ற பயிற்சிக்கு வந்தனர். அப்போது ஞாயிற்றுக்கிழமை மலையடிவாரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அந்த சமயம் தூரத்தில் புகை மூட்டத்தை கண்ட குழுவினர் சுதாரித்து கொண்டு வேகமாக இறங்க முயற்சித்தனர். ஆனால் இவர்கள் இறங்குவதற்குள் தீ மளமளவென பரவியிது.
இன்னும் உயரும்
இந்த தீவிபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 10 பேர் காயங்களின்றி தப்பினர். மீதம் 17 பேர் 50 சதவீதத்துக்கு மேல் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. தீக்காயம் அதிகமாக உள்ளதால் இந்த எண்ணிக்கை இன்னும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.
சோகம்
பெரும்விபத்தால் தமிழகத்தையே இந்த சம்பவம் உலுக்கியது. இறந்தவர்களும் காயமடைந்தவர்களும் 30 வயதுக்குள்பட்டவர்கள் என்பதால் இந்த கோர விபத்து குறித்து கேள்விப்படுபவர்களையும் வேதனை அடைய செய்துள்ளது.
அனுதாபங்கள்
இதுகுறித்து சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், தேனி மாவட்டம், குரங்கணி காட்டு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து, மிகவும் வேதனையை உண்டாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
நம்பிக்கை
அதேவேளையில் இனிமேலாவது அனைவரும் இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்.
சந்தேகம்
இனிமேலாவது இதுபோன்ற விபத்துகள் தடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த விபத்து இயற்கையானதா இல்லை செயற்கையானதா என்பதையும் ஆராய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார் சத்யராஜ்.