வெள்ளத்தின் போது முஸ்லிம் சோறு போட்டாங்களே..அது தேச விரோதமா? - சிம்பு சுளீர் கேள்வி
போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை தேசவிரோதிகள் என சித்தரிப்பதற்கு நடிகர் சிம்பு கண்டனம் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாட முடியாமல் போனதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை தேச விரோதிகள் என சித்தரிப்பதற்கு நடிகர் சிம்பு கண்டனம் தெரிவவித்துள்ளார். கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இஸ்லாமியர்கள் செய்த உதவியும் தேச விரோதமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் திடீரெனதடியடி நடத்தி கலைத்தனர். இதனால் சென்னையில் கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் இந்த அடாவடிக்கு அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
தேசவிரோதிகளாக சித்தரிப்பதா?
இந்நிலையில் நடிகர் சிம்பு சென்னைல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை தேச விரோதிகளாக சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது.
வெள்ளத்தில் உதவியது தேச துரோகமா?
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஏராளமான இஸ்லாமியர்கள் உணவு வழங்கினர். வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு உதவி செய்தனர். அதுவும் தேச துரோகமாக?
மாணவர்கள் தானாகவே போராடினர்
மாணவர்கள் தானாகவே போராடினர். யாரும் தலைவர்கள் கிடையாது. ஒற்றுமையாக திரண்டு மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடினர். போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி கொண்டாடப்பட வேண்டியிருக்க ஒன்று.
சட்டத்தை விளக்கியிருக்க வேண்டும்
காவல்துறை அவகாசம் வழங்கியிருந்தால் அசம்பாவிதம் நடந்திருக்காது. சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அரசு பிரதிநிதிகள் யாராவது விளக்கியிருக்கலாம். சட்டத்தைப்பற்றி விளக்கி கூறியிருந்தால் வன்முறை ஏற்பட்டிருக்காது.
மாணவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டார்களா?
மாணவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கான வெற்றியை கொண்டாடாமல் போனது வேதனையளிக்கிறது. இவ்வாறு நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் பேசினார்.