பணமதிப்பிழப்புக்கு எதிரான பாடலை பாடியதில் வருத்தம் இல்லை... நடிகர் சிம்பு #DemonetizationAnthem
பணமதிப்பிழப்புக்கு எதிரான பாடலை பாடியதில் எனக்கு வருத்தம் இல்லை என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: பணமதிப்பிழப்புக்கு எதிராக நான் பாடிய பாடலில் எந்த சர்ச்சைக்குரிய விஷயமும் இல்லை என்றும் அதனால் பாடல் பாடியதற்கு நான் வருந்தவில்லை என்றும் நடிகர் சிம்பு விளக்கமளித்துள்ளார்.
தட்றோம் தூக்றோம் என்ற படத்துக்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் சந்தித்த பாதிப்பு குறித்து பாடலாசிரியர் சிம்பு எழுதிய பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் கடந்த 8-ஆம் தேதி இணையதளத்தில் வெளியானது.
இதனால் பாஜகவினர் போராட்டம் நடத்தலாம் என்பதால் தி.நகர் மாசிலாமணி தெருவில் உள்ள சிம்புவின் வீட்டுக்கு போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு சிம்பு பேட்டியளித்துள்ளார்.
எனது படம் அல்ல
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு வருஷம் கழித்து இந்த பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் நான் எழுதினதோ என் படத்துல வர பாட்டோ கிடையாது. வேறு ஒருவர் நடித்த படத்தில் இந்த மாதிரியான சூழ்நிலையில் மக்களை பாதிக்கிற மாதிரியான பாடல் என்பதால் மட்டுமே நான் பாடினேன்.
எதிர்ப்பதற்கு ஒன்றும் இல்லை
இதுல தவறான விஷயமோ இல்லை தகவலோ ஏதும் கிடையாது. இந்த பாடலை எதிர்ப்பதற்கு ஒன்றும் இல்லை. இந்த பாடலால் ஏதாவது பிரச்சினை வரும் என்பதால் போலீஸாரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எனது வீட்டுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.
சாதாரண மக்களுக்கு கஷ்டம்
பணமதிப்பிழப்பு குறித்து என்னோட கருத்தை கேட்கிறீர்கள். எல்லாவற்றிலும் சாதகங்களும் பாதகங்களும் இருக்கும். பணமதிப்பிழப்பு வந்தபோது நாம் அனைவரும் ஒரு சாதகமான ஒன்றை எதிர்பார்த்தோம். ஆனால் சாதாரண மக்களுக்கு கொஞ்சம் கஷ்டங்கள் இருந்தன.
மனதுக்கு வருத்தம்
பழைய பணத்தை மாற்ற வேண்டியது, ஏடிஎம் வாசலில் நிற்க வேண்டியது அதுபோன்ற பிரச்சினைகள் சில இருந்தன. அது தவிர்க்க முடியாத விஷயம் என்றபோதிலும் அதனால் ஏற்படக் கூடிய விஷயங்கள் மனதுக்கு வருத்தமளிக்கிறது என நான் கருதுகிறேன்.
சர்ச்சை கிடையாது
என்னை பாட சொல்லி கேட்டு நான் ஒப்புக் கொண்ட பிறகுதான் அதில் என்ன வரிகள் இருந்தன என்பது எனக்கு தெரிந்தது. எனவே இதில் சர்ச்சையை ஏற்படுத்துவதற்கு ஒன்றும் இல்லை. ஒரு விஷயம் எனது மனதுக்கு சரி என்று பட்டால் அது குறித்த கருத்தை கூறுவதில் நான் பயம் கொண்டது கிடையாது. அதற்காகதான் பாடினேனே தவிர சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நான் பாடவில்லை.
வருத்தம் இல்லை
இந்த பாடலில் சர்ச்சை ஏற்படும் அளவுக்கு யாரையும் புண்படுத்தும்படியோ அல்லது தவறான விஷயமோ இல்லை. இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என்பதால் பாடியதற்காக நான் வருத்தப்படவில்லை. ஏனென்றால் நான் ஒரு பாடகர், பாடுவது எனது தொழில்.
மன்னிப்பு கேட்பேன்
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிலருக்கு நன்மையும் சிலருக்கு தீமையும் நடந்திருக்கிறது. இதை கருத்தில் கொண்ட அந்த படத்தின் இயக்குநர் இந்த பாடலை அந்த படத்தில் வைத்துள்ளார் என நான் கருதுகிறேன். இந்த பாடலுக்கு இதுவரை யாரும் எதிர்ப்பு தெரிவித்தது போல் எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை இந்த பாடலால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஏன்னா அடுத்தவர்களை புண்படுத்துவது நோக்கம் இல்லை.
இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.