ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். விடுவிக்கும் வரை அறவழியில் போராட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என நடிகர் சிம்பு கோரிக்கை விடுத்துள்ளார். இல்லையெனில் தன்னையும் கைது செய்யுங்கள் என்றும் சிம்பு ஆவேசமாக கூறினார்.
நடிகர் சிம்பு சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தடியடிக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது,
"வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார்? தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் ஆண்டவனிடமிருந்து தப்பிக்க முடியாது. மீனவர்கள் மாணவர்களுக்கு உதவி செய்யவே வந்தனர். அவர்களையும் காவல்துறையினர் தாக்கியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உதவி செய்தவர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களை விடுவிக்கும் வரை நான் அகிம்சை வழியில் போராடுவேன். இல்லையெனில் என்னையும் கைது செய்யுங்கள். என்ன கைது செய்ய முடியாவிட்டால் கைது செய்தவர்களை விடுதலை செய்யுங்கள்.
மீனவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அரசே ஒரு நாள் தேர்வு செய்து ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாட அனுமதி வழங்கி அறிவிக்க வேண்டும்". இவ்வாறு நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் பேசினார்.