தி.மு.க. இனி ஒருபோதும் ஆட்சியை பிடிக்க முடியாது.. நடிகர் சிங்கமுத்து விளாசல்
தி.மு.க. இனிமேல் எப்போதும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று நடிகர் சிங்கமுத்து தெரிவித்துள்ளார்.
கரூர்: அரவக்குறிச்சியில் அ.தி. மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் சிங்கமுத்து, இனிமேல் தி.மு.க. எப்போதும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், அரவக்குறிச்சியில் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் சிங்கமுத்து, 3 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும். முதல்வரின் நலத்திட்டங்களை மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் நடைபெற்ற தேர்தலில் சரியான முதல்வர் இவர்தான் என முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மீண்டும் மக்கள் தேர்வு செய்தார்கள்.
தி.மு.க.வின் பொய் பிரசாரத்தினால் 89 எம்.எல்.ஏ.க்கள் வந்துவிட்டார்கள். அப்பாவி மக்கள் சிலர் ஏமாந்து தி.மு.க. ஆட்சிக்கு வரும் என நினைத்து வாக்களித்து விட்டார்கள். இனிமேல் எந்த காலத்திலும் அந்த தவறினை மக்கள் செய்ய மாட்டார்கள். அண்ணா காலத்திற்கு பின்னர் எப்போதும் தமிழக மக்கள் தி.மு.க. பக்கம் நின்றதில்லை.
தமிழகத்தில் செயல்படாத ஆட்சி நடக்கிறது என எதிர்கட்சியினர் சொல்வதில் உண்மை இல்லை. தமிழக மக்களுக்கு முதல்வர் என்ன குறை வைத்திருக்கிறார். மக்கள் நலத் திட்டங்கள் நாளும் நிறைவேறி கொண்டிருக்கிறது. தி.மு.க.வினரின் பொய் பிரசாரம் எடுபடாது.
மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என கனவு காண்கிறார். எந்த காலத்திலும் அவரது கனவு நிறைவேறாது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களின் அயராத வேண்டுதலால் உடல் நலம் தேறிவிட்டார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து சிங்கம்போல எழுந்து வருவார் என்றார் அவர்.