நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஜாதி வட்டத்திற்கு அடைக்க வேண்டாமே!
சிவாஜி கணேசனின் 91வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் 91வது பிறந்தநாள் விழாவில், அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமான அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். முதல் முறையாக இது அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
அரசு விழாவாக முதல் முறையாக கொண்டாடப்படுவதால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.
சிவாஜி கணேசனின் 91வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
[சிவாஜி மணிமண்டபத்தில் கருணாநிதியின் பெயரும் இடம்பெறும்.. நடிகர் பிரபு நம்பிக்கை]
அமைச்சர்கள்
இதையொட்டி சென்னை அடையாறில் சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, மா.பா. பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அரசு நிகழ்ச்சி என்பதை தாண்டி, சிவாஜியின் குடும்பத்திற்கும், சொந்தங்களுக்கும் நெருக்கமானவர்கள்தான் இந்த அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மா.பா.பாண்டியராஜன் மற்றும் பெஞ்சமின் மட்டும் இதில் கொஞ்சம் விதி விலக்கு. அதே நேரம் சிவாஜி உறவினர்களுக்கு நெருக்கமான தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணிகண்டன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
அரசு விழா
ராம்குமார், நடிகர்கள் பிரபு, விக்ரம்பிரபு, விஜயகுமார், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பி.சி.அன்பழகன் ஆகியோரும் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதன்பிறகு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது: சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து பெருமை சேர்த்தது அதிமுக அரசு.
மெரினாவில் சிலை
நீதிமன்ற உத்தரவுப்படி மெரினாவில் இருந்த சிவாஜி கணேசனின் சிலை அகற்றி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது. மெரினாவில் சிவாஜி சிலை அகற்றப்பட்டதற்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவர் பொது நல வழக்கு தொடர்ந்ததாலேயே கோர்ட்டு அதை அகற்ற உத்தரவிட்டது. மெரினா கடற்கரையில் சிவாஜி கணேசனுக்கு வேறு சிலை வைக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்தால் அது பற்றி அரசு பரிசீலிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜாதிக்கு அப்பாற்பட்டவர்
சிவாஜி என்பவர் மாபெரும் கலைஞர். அவர் ஜாதி வட்டத்திற்கு அப்பாற்பட்டவர். அந்த வகையில் அந்த பெருங்கலைஞன் வருங்காலத்தில் கொண்டாடப்பட வேண்டியது அவசியம். சிவாஜி குடும்பத்தினர் இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி, அனைத்து சமூக பிரமுகர்களையும் சிவாஜி தொடர்பான முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று சிவாஜி ரசிகர்கள் சிலர் கூறியதை நாம் கேட்க முடிந்தது.