அரசியலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தோற்றது தொகுதி மக்களுக்குத்தான் அவமானம்- ரஜினிகாந்த்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அரசியலில் தோற்றது அவரது தொகுதி மக்களுக்குத்தான் அவமானம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தேர்தலில் போட்டியிட்டு அவரது சொந்த தொகுதியிலேயே தோற்றது அந்த தொகுதி மக்களுக்குத்தான் அவமானம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபத் திறப்பு விழா இன்று சென்னை அடையாறில் நடைபெற்றது. இந்த மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
துணை முதல்வர் ஓபிஎஸ் அதிர்ஷ்டசாலி என்பது இங்கு மீண்டும் நிரூபணமாகியுள்ளது. ஏனென்றால் மாபெரும் மனிதனான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை திறந்து வைக்க வந்திருப்பதால்தான்.
ஆன்மிக படங்கள்
சுதந்திர போராட்ட தியாகிகளை கண் முன் கொண்டு வந்து காட்டியவர் சிவாஜி கணேசன். கடவுள் மறுப்பு காலம் உச்சத்தில் இருந்தபோது ஆன்மிக படங்களில் அவர் நடித்துள்ளார்.
சிலையானவர்களுடன் பழகியது பெருமை
அவர் சொந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது அவருக்கு அவமானம் இல்லை. அவரது தொகுதி மக்களுக்குத்தான் அவமானம். மண்ணோடு மண்ணாகியவர்களுடன் பழகுவதும் சாம்பாலோடு சாம்பலாக ஆனவர்களுடன் பழகுவதும் பெருமை என்றாலும் அதன்பிறகு சிலையாகிறவர்களுடன் பழகியது மிகவும் பெருமை. வீட்டில் ஆயிரம் சிலைகள் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அரசால் சிலை வைப்பது பெருமை.
சினிமா புகழ்
அரசியலில் வெற்றி அடைய சினிமா புகழும், பெயரும் மட்டும் போதாது. மக்களின் ஆதரவும் தேவை. அரசியலில் வெற்றி பெறுவது எப்படி என்ற ரகசியம் கமல் ஹாசனுக்கு தெரிந்திருக்கும்.
கைப்பிடித்து அழைத்து செல்கிறேன்
ஒரு வேளை அந்த ரகசியத்தை 2 மாதங்களுக்கு முன்னால் கேட்டிருந்தால் அவர் சொல்லியிருப்பாரோ என்னவோ. தற்போது அந்த ரகசியத்தை கேட்டால் என்னுடன் அரசியலுக்கு வாருங்கள் அழைத்து செல்கிறேன் என்கிறார். சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட முன்வந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.