காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார் சிவகார்த்திகேயன்
காவேரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
சென்னை: காவேரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் விசாரித்தார்.
கடந்த ஜூலை 27 ஆம் தேதி இரவு திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் கோபாலபுரம் இல்லத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு 6 வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்து செல்கின்றனர். அதே போல, தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், சூர்யா, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் கருணாநிதின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து, இன்று நடிகர் சிவகார்த்திகேயன் காவேரி மருத்துவமனைக்கு வந்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். இவரைத்தொடர்ந்து, நகைச்சுவை நடிகர்கள் போண்டா மணி, முத்துக்காளை மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கருணாநிதி அவர்கள் விரைவில் உடல் நலம் பெற வேண்டும். அவருடைய பராசக்தி திரைப்பட வசனத்தைப் பேசிதான் நடிக்க வந்தோம். அவர் உடல் நலம் பெற்று அடுக்கு மொழியில் பேச வேண்டும் என்று தெரிவித்தனர்.