பிரமிப்பும், ஆச்சர்யமும் கொண்டவர் ஜெயலலிதா: நடிகர் சூர்யா புகழாரம்
மறைந்த ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் சூர்யா.
சென்னை: மறைந்த ஜெயலலிதா பிரமிப்பும் ஆச்சர்யமும் கொண்ட பெண்மணி என நடிகர் சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார்.
நேற்று இரவு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானார். கடந்த 75 நாட்களாக அவர் உடல் நலமில்லாமல் பட்ட வேதனை நேற்றோடு முடிவுக்கு வந்தது. என்றாலும், அவரது இழப்பு அதிமுகவிற்கும் பேரிழப்பாக மாறியுள்ளது. தமிழக மக்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. காலையில் இருந்து ஏராளமான தேசிய, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர். ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் என ராஜாஜி ஹாலில் குவித்திருந்தனர்.
இறுதி ஊர்வலத்திற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், நிற்கவும் இடமில்லாத வகையில் நெருக்கி அடித்து விஐபிக்களும், திரைத்துறையினரும் ஜெயலலிதாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவிற்கு திரைப்பட நடிகர் சூர்யா நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், ஜெயலலிதாவின் செயல்பாடுகள் பிரமிப்பானவை, ஆச்சர்யம் ஊட்டக் கூடியவை. அவருக்கு இருக்கும் பல்வேறு வேலைகளுக்கு நடுவில் எனது திருமணத்திற்கு வந்திருந்தார். எங்கள் வீட்டிற்கு வந்து எங்களை ஆசிர்வாதம் செய்திருக்கிறார். அவருடைய அன்பு எங்களை விட்டு எப்போது நீங்காது. அவருடை ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என்று சூர்யா கூறினார்.