நாட்டில் உள்ள சிறைகளிலேயே வசதியானது பரப்பன அக்ரஹார சிறைதான்.. எஸ்வி.சேகர் தடாலடி!
நாட்டில் உள்ள சிறைகளிலேயே மிகவும் வசதியானது பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறைச்சாலைதான் என நடிகர் எஸ்வி.சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை: நாட்டில் உள்ள சிறைகளிலேயே மிகவும் வசதியானது பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறைச்சாலைதான் என நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்வி.சேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் எஸ்வி.சேகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது பெயரில் போலியாக முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதை முடக்கி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கமிஷனர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த எஸ்வி.சேகர் நாட்டில் உள்ள சிறைகளிலேயே பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைதான் வசதியானது என்றார். மேலும் நாட்டின் பிற சிறைகளில் உள்ளவர்கள் தங்களை பெங்களூர் சிறைக்கு மாற்றுமாறு கேட்டு வருவதாகவும் அவர் கிண்டலடித்தார்.