திருவாரூரில் களம் இறங்குகிறாரா டி.ஆர்.. "அவருடன்" கை கோர்க்க போகிறாராமே!!??
இனி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக டி.ஆர். அறிவித்துள்ளார்.
சென்னை: வரப்போகிற திருவாரூர் இடைத்தேர்தலில் டி.ராஜேந்தர் தேர்தல் களத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
டி.ராஜேந்தர் என்றாலே, அவரது டைமிங், ரைமிங் மற்றும் தாடி நம் கண் முன்னால் வந்து நின்றுவிடுகிறது. தமிழ் சினிமாவில் மிக திறமை வாய்ந்தவர். நடிப்பு, இசை, பாடல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தையும் தொட்டு அதில் உச்சத்தையும் கண்ட அபூர்வ படைப்பாளி.
முழுக்க முழுக்க கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில் புதர் தாடியுடன் அப்போதைய ஹீரோக்களை பதற வைத்தவர். 80-களில் இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம், குறிப்பாக பெண்கள் கூட்டம் நிறையவே இருந்தது என்பதை மறுக்க முடியாது.
எம்ஜிஆர் மீது பயம்
புகழும், பேரும் வந்தாலே கூடவே பேராசையும் வந்துவிடுமே!! சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போதே அரசியல் ஆசை வந்துவிட்டது டி.ஆருக்கு. அது வேர்விட முளைக்க காரணமாக இருந்ததே எம்ஜிஆர்தான். அப்போது எம்ஜிஆர் முதல்வராக இருந்த சமயம், டி.ராஜேந்தரின் படங்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. உயிரை கொடுத்து நடித்தும், பல திறமைகளை கொட்டியும் டி.ராஜேந்தரின் படத்தை வாங்க யாருமே முன்வரவில்லை. காரணம் - எம்ஜிஆர் மீதான பயமே.
எதிரான பிரச்சாரம்
விநியோகஸ்தர்கள் யாருமே முன்வராத நிலையில், திமுக பிரமுகர் ஒருவர் டி.ஆரின் படத்தை விலைக்கு வாங்கினார்.இந்த நிகழ்வு முதல் திமுகவில் "பச்சக்"கென்று ஒட்டிக் கொண்டார் டி.ஆர். அங்கு ஒட்டிக் கொண்டதுடன் சும்மா இருந்தாரா? அதுவும் இல்லை. எம்ஜிஆருக்கு எதிராக பேச ஆரம்பித்துவிட்டார். அன்றைய காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்த ஒரே சினிமா பிரபலம் இவர் மட்டுமே.
கைதட்டல்கள்
டி.ஆரின் மக்கள் செல்வாக்கையும், அவரது தமிழ் மொழியையும், எம்ஜிஆருக்கு எதிராக பேசும் துணிச்சலையும் கண்ட திமுக இவரை அந்த நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்தி கொண்டது. ஒவ்வொரு தேர்தலின்போதும் டி.ஆரின் பேச்சு மக்களிடம் பாராட்டையே பெற்று தந்தன. சென்ற இடமெல்லாம் கைதட்டல்களை அள்ளி குவித்தன.
அலங்கரித்த மேடை
இந்த சமயத்தில் திமுகவின் அனல்தெறிக்கும் பேச்சாளராக இருந்த வைகோ கட்சியை விட்டு ஓரங்கட்டப்பட்டதும், அந்த இடத்தை டி.ஆர். மிக மிக சரியாக பயன்படுத்தி கொண்டார். தீவிர திமுக பற்றின் காரணமாக டி.ஆர். பூங்காநகர் தொகுதியில் நிறுத்தப்பட்டார். அங்கு வெற்றியும் பெற்று தொகுதி மக்களிடமும் கணிசமான பெயரை பெற்றார். ஒருபக்கம் கட்சியில் செல்வாக்கு, மற்றொரு புறம் தமிழக மக்களிடம் செல்வாக்கு என உயர உயர திமுகவிற்குள்ளேயே எதிரிகள் முளைக்க தொடங்கினர்.
இலட்சிய திமுக
இதன் விளைவு அடுத்த தேர்தலில் வேண்டுமென்றே தோற்கடிக்கப்பட்டார், கட்சி அடிப்படை உறுப்பினர் நிலையை புதுப்பிக்கவில்லை என்று ஒரு சாக்கை வைத்து கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். பிறகு 2004ம் ஆண்டு அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் பெயர் பலகையில் பெரியார், அண்ணா படங்களுடன் டி. ராஜேந்தர் படமும் இடம் பெற்றிருக்கும். ஆங்காங்கே சில கூட்டங்களை நடத்தினார். பிறகு மீண்டும் அதே கட்சியை பட்டி, டிங்கரிங் பார்த்து இலட்சிய திமுக என்று அறிமுகம் செய்தார்.
பெரியார் படம்
அந்த கட்சி பேனரில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா இடம்பெற்றிருந்தன. திராவிடர் கழகத்திலிருந்து வந்தாலும் நியூமராலஜியை டி.ஆர். விட்டபாடில்லை. தன் அனைத்து படங்களும் ஒற்றைப்படை, அல்லது 3 இலக்க சொற்களை வருவது போலவே அமைத்து கொள்வார். பிறகு டி.ராஜேந்தர் விஜய.டி.ராஜேந்தர் ஆகிவிட்டார். சிலம்பரசன், எஸ்.டி.ஆர். ஆகிவிட்டார், லட்சிய திமுக, இலட்சிய திமுகவாகிவிட்டது. என்றாலும் பேனரில் பெரியாரி படத்தை வைத்து கொண்டு இதையெல்லாம் செய்வதைதான் ஜீரணிக்க முடியவில்லை.
வைகோ, டி.ஆர்.
பொதுவாக திமுகவிலிருந்து வெளியே வந்தவர்களில் மிகவும் புகழ்பெற்றது எம்ஜிஆர் மட்டுமே. அதற்கு சினிமா பிரபலம் என்ற பிம்பம் இருந்தது. எம்ஜிஆர் அளவுக்கு வேறு யாரும் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை. வைகோ சுடர்விட்டு ஒளிர்ந்திருக்கலாம், ஆனால் அரசியலை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லையா? அல்லது வைகோ யாரும் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லையா என தெரியவில்லை.
இனி தீவிர அரசியல்
இதே போலதான் டி.ராஜேந்தரும். திமுகவிலிருந்து வந்தவர்களில் சோபிக்காதவர்களில் இவரும் ஒருவர். ஆரம்ப காலத்தில் சினிமாவில் இவருடைய பார்முலா இவருக்கு வெற்றியையும் புகழையும் தேடி தந்ததென்பதென்னமோ உண்மைதான். ஆனால் அது நீண்ட நாள் நிலைக்கவில்லை. காலம் மாற தொடங்கிவிட்டது. டி.ஆரின் அடுக்கு மொழி வசனங்கள் ஒரு காலத்தில் வியந்து பார்க்கப்பட்டது உண்மைதான். ஆனால் தற்போதும் அதே போல்தான் நம்மை மக்கள் விரும்புகிறார்கள், ரசிக்கிறார்கள், ஏற்று கொள்கிறார்கள் என்று டி.ஆர். நினைத்து கொண்டிருக்கிறார். அதனால்தான் இனிமேல் தீவிர அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளார்.
லட்சிய திமுக சாதனைகள்?
உண்மையிலேயே இவருக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்குமானால், இன்னமும் இவரது பேச்சும் திறமையும் மக்களிடம் எடுபடும் என்றால், லட்சிய திமுகவை திறம்பட நடத்தியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? லட்சிய திமுக செய்த சாதனைகளும், தமிழக மக்களுக்கு ஆற்றிய பணிகளும் தொண்டுகளும்தான் இவ்வளவு காலம் என்ன? அவ்வப்போது ஊடகங்களுக்கு நானும் கட்சி தலைவர்தான் என்பதை நினைவூட்டி அறிக்கைகளையும் அலப்பறைகளையும் செய்தால் மட்டும் போதுமா? லட்சிய திமுகவில் இவருக்கு பிறகு யாரையாவது வளர்த்து விட்டிருக்கிறாரா? இப்போது தீவிர அரசியலில் ஈடுபடுகிறேன் என்று டி.ஆர். சொல்லி இருக்கிறார்.
திருவாரூரில் போட்டியா?
ஆனால், திமுகவில் தன்னை ஒரு கட்டத்துக்கு மேலே வளர விடாமல் தடுத்தது ஸ்டாலின்தான் என உறுதியாகவே நம்பி வருகிறார் டி.ஆர். திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ளது பற்றி கருத்து கேட்டதற்கு கூட, பதில் சொல்ல விரும்பவில்லை டி.ஆர். எனவே இடைத்தேர்தல் நெருங்கும் சமயத்தில் முழு வீச்சில் அரசியலில் ஈடுபட போவதாக டி.ஆர். கூறியுள்ளார். இதில், திருவாரூரில் போட்டியிட டி.ஆர் திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.
அழகிரி ஆதரவா?
அதாவது குறைந்தபட்சம் திருவாரூரில் திமுகவின் ஓட்டுக்களை சிதறடிக்க வேண்டுமென்றாவது விரும்புகிறாராம். எனவே முதல்கட்டமாக திருவாரூர் இடைத்தேர்தலில் நின்று ஸ்டாலினுக்கு எதிராக காய் நகர்த்தக்கூடும். இதற்காக அழகிரியின் ஆதரவையும் டி.ஆர். கோர உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டாலினுக்கு எதிரான காரியம் என்று யார், எதை சொன்னாலும் முதல் ஆளாக வந்து நிற்பார் அழகிரி. எனவே டி.ஆருக்கு அழகிரி ஆதரவு அளித்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லைதான்.