ரஜினியின் அழைப்பு ரசிகர்களுக்கு அல்ல, வாக்காளர்களுக்கு... நோட் பண்ணுங்கப்பா... அரசியல், அரசியல்!
அரசியல் மாற்றத்தை விரும்பும் மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை : அரசியல் மாற்றத்தை விரும்புபவர்கள் ரஜினி மன்றம் இணையதளத்தில் வாக்காளர் அடையாள அட்டை தகவல்களுடன் பதிவு செய்யுமாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்த அழைப்பை ரஜினி தனது ரசிகர்கள் என்று மட்டும் சுருக்கிக் கொள்ளாமல் வாக்காளர்களை குறி வைத்து பக்கா அரசியல்வாதியாக செயல்படத் தொடங்கியுள்ளார்.
அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த ரஜினிகாந்த், தனது அரசியல் அறிவிப்பின் போதே மாணிக் பாட்ஷாவாக வேறு முகத்தை காட்டினார். அவருடைய பேச்சில் வழக்கமாக இருக்கும் குழப்பம் இல்லாமல் நேற்றைய பேச்சு தெளிவாக இருந்தது. அரசியல்வாதிக்கு இருக்கும் முதல் தகுதியான இதிலேயே ரஜினி பாஸ் ஆகிவிட்டாரே என்பது அனைவராலும் உற்று நோக்கப்பட்டது.
இந்நிலையில் அரசியல் கட்சி அறிவித்த கையோடு, இன்று உறுப்பினர் சேர்க்கைக்காக ரஜினிமன்றம்.ஓஆர்ஜி என்ற இணையதள பக்கத்தையும், ஆன்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தும் வகையில் ரஜினிமன்றம் என்ற ஆப்பையும் தொடங்கியுள்ளார் ரஜினி. நான் அரசியலுக்கு வருவதாக முடிவு செய்து விட்டேன், அதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் அம்பு விடுவது மட்டும் தான் பாக்கி என்று ரஜினி சொல்லி இருந்தார்.
அனைவரும் பதிவு செய்யலாம்
இதனிடையே இன்று பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத ரசிகர் மன்ற உறுப்பினர்கள் மன்ற விவரங்களுடன் இந்த இணையதள பக்கத்தில் பெயர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதே போன்று ரசிகர்கள் மட்டுமல்ல அரசியல் மாற்றம் விரும்பும் அனைவரும் இதில் பதிவு செய்யலாம் என்றும் ரஜினி வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில் கேட்டுக் கொண்டுள்ளார்.
வாக்காளர்களைக் கவர
உலகம் முழுவதும் நடிகர் ரஜினிகாந்திற்கு 60 ஆயிரம் ரசிகர் மன்றங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் தவிர பதிவு ரசிகர் மன்றத்தில் பதிவு செய்யாத ரசிகர்களும் இருக்கின்றனர். ரஜினியின் இன்றைய அறிவிப்பு ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றுவதோடு, தனது ரசிகர்கள் அல்லாதவர்களையும் வாக்காளர்களாக மாற்றும் அரசியல் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது.
மக்கள் செல்வாக்கை அறியவா?
ஒரு வகையில் ரஜினி தனக்கு வாக்காளர்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை அறிவதற்காக இதனை செய்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது. கமல் போல ரஜினியும் முதலில் செயலி தான் அறிவிப்பார் என்று செய்திகள் வெளியான நிலையில் நேற்று அரசியல் அறிவிப்பை மட்டும் வெளியிட்டு விட்டு, இன்று இணையதளம் மற்றும் செயலியை ரஜினி அறிமுகம் செய்துவைத்துள்ளார்.
அரசியல் மாற்றத்திற்காக
கமல் அரசியலுக்கு வருவதாக சொன்ன கையோடு சமூக ஆர்வலர்கள், ஊழல் ஒழிப்பு இயக்கத்தினருடன் அவ்வபோது கருத்துரையாடி வருகிறார். இந்நிலையில் சமூக ஆர்வலர்களும் தன் பக்கம் இணையலாம் என்ற நோக்கில் அரசியல் மாற்றம் விரும்புபவர்கள் என்ற வார்த்தையை ரஜினி பயன்படுத்தி இருக்கிறார். இதே போன்று தன்னுடைய வீடியோ பதிவின் முடிவில் வாழ்க தமிழக மக்கள், வளர்க தமிழ்நாடு என்று சென்டிமென்ட்டாக பேசியுள்ளார்.