ஜெ. சாகவில்லை.. உயிரோடுதான் இருக்கிறார்: நடிகர் வடிவேலு உருக்கம்
ஜெயலலிதா சாகவில்லை; உயிரோடுதான் இருக்கிறார் என்று நகைச் சுவை நடிகர் வடிவேலு உருக்கமாக கூறியுள்ளார்.
சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானார். அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று மிக உருக்கமாக தனது இரங்கலை பதிவு செய்திருக்கிறார் நகைச் சுவை நடிகர் வடிவேலு.
இதுகுறித்து நடிகர் வடிவேலுவின் இரங்கல் செய்தி:
ஜெயலலிதாவின் மறைவு மிக துயரமாக இருக்கிறது. என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவர் என்னுடைய தீவிர ரசிகர் என்று நான் கேள்விப்பட்டிருக்கேன். அவர் என் காமிடியை நிறைய ரசிப்பார் என்றும் கேள்வி பட்டிருக்கேன். மிகத் துணிச்சலானவர் அவர். யாருக்கும் பயப்பட மாட்டார். மனதில் படுவதை சொல்லக் கூடியவர். என்னைப் பொருத்தவரை அவர்கள் காலமாகவில்லை.
அவரின் பெயரை சொல்லி நிறைய பேர் என்னென்னவோ செய்தார்கள். நான் முதல்வரை சந்திக்க வேண்டும் என்று நிறைய ஆசைப்பட்டேன். என்னை யாருமே உள்ளே விடவில்லை. ஆனால், அவர்களால்தான் எனக்கு தொழில் போனது, பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று யாராவது சொன்னால் நான் சத்தியமாக நம்ப மாட்டேன். முதல்வரைச் சுற்றி உள்ளவர்கள்தான் என்னை நடிக்க விடவில்லை என்பதை நான் கேள்விப்பட்டேன். அவரின் பெயரை சொல்லி யார் யாரோ என்னென்னவோ செய்துவிட்டார்கள். அது குறித்து பேசும் நேரம் இதுவல்ல.
முதல்வர் மிக மிக நல்லவர். சிறந்த நகைச்சுவை எண்ணம் கொண்டவர்கள். என் காமிடிக்கு அவர்கள் அடிமை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவர் நல்ல மனது கொண்டவர். எல்லோரையும் நன்றாக பார்த்து இருக்கிறார்கள். எல்லோருக்கும் நன்றாக செய்திருக்கிறார்கள்.
அவர் சாகவில்லை.. சாகவில்லை.. சாகவில்லை... எம்.ஜி.ஆருக்கு அப்புறம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் இயற்கையானவர். அந்த தாய் இறந்தது எனக்கு துயரமாக இருக்கிறது. அவர்களின் ஆன்மா இறைவனின் காலடியில் சேர வேண்டும்.