ஸ்டார் கிரிக்கெட்:நடிகர் சங்க கணக்கில் பெரும் மோசடி-ஒன்இந்தியா தமிழுக்கு வாராகி எக்ஸ்குளூசிவ் பேட்டி
ஸ்டார் கிரிக்கெட் தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்ட கணக்குகளில் மிகப் பெரும் மோசடி நடந்துள்ளதாக ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டியில் நடிகர் வாராகி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: நடிகர் சங்கம் நடத்திய ஸ்டார் கிரிக்கெட் போட்டி தொடர்பான நடிகர் சங்க கணக்குகள் புள்ளி விவரங்களுடன் இல்லாமல் மோசடியை மறைக்க மேலோட்டமாக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது என்று ஒன் இந்தியா தமிழ் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் வாராகி குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்ற போது கடந்த ஏப்ரல் மாதம் சங்க கடன்களை அடைத்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட ஸ்டார் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
ஸ்டார் கிரிக்கெட் போட்டி மற்றும் சன் தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பு உரிமம் வழங்கியது ஆகியவற்றில் ஊழல் நடந்துள்ளதாக நடிகர் வாராகி குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் நடிகர் சங்க நிர்வாகிகளோ இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தனர்.
இந்த நிலையில் நடிகர் சங்கம் தம்முடைய இணையதளத்தில் ஸ்டார் கிரிக்கெட் தொடர்பான கணக்கு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நடிகர் சங்கம் மற்றும் நடிகர் சங்க அறக்கட்டளை ஆகியவற்றில் இருந்து ஸ்டார் கிரிக்கெட்டுக்கு செலவிடப்பட்ட தொகை விவரங்கள் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கணக்கு விவரங்களை விரிவாக வெளியிடப் போவதாக கூறிவிட்டு தங்களது ஊழல்களை மறைக்க வெறும் மேலோட்டமாகவே கணக்கு காட்டியுள்ளனர் என்று நடிகர் வாராகி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்துக்கு நடிகர் வாராகி அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி விவரம்:
அறங்காவலர்கள் கையெழுத்து?
நடிகர் சங்கம் மற்றும் நடிகர் சங்க அறக்கட்டளை ஆகியவற்றில் இருந்து பணத்தை எடுத்து ஸ்டார் கிரிக்கெட்டுக்கு செலவு செய்ததாக கூறியுள்ளனர். நடிகர் சங்க அறக்கட்டளையில் இருந்து பணத்தை எடுக்க கமல்ஹாசன் உட்பட அறங்காவலர்கள் கையெழுத்து அவசியம் தேவை. அப்படி அவர்களின் கையெழுத்துடன்தான் முதலில் இந்த பணம் எடுக்கப்பட்டதா? என்பதை ஏன் பகிரங்கப்படுத்தவில்லை.
சன் டிவி ஒப்பந்தம் எங்கே?
சன் தொலைக்காட்சியுடனான ஒப்பந்தம் போடப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறியிருந்தேன். குண்டூசிக்கும் கணக்கு காட்டுவோம் என வசனம் பேசிய நடிகர் சங்க நிர்வாகிகள் சன் டிவியுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ஏன் இணையத்தில் பகிரங்கமாக வெளியிடவில்லை? இதில் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு என்ன தயக்கம் இருக்கிறது? மடியில் கனமில்லை என்றால் பகிரங்கப்படுத்த வேண்டியதுதானே...
மேக்கப் போட்டு விளையாட்டு
இனி கணக்கு விவரங்களில் உள்ள மோசடிகளை பாருங்கள்... இவர்கள் நடத்துவது கிரிக்கெட் போட்டி. இந்த போட்டிக்கு உபகரணங்கள், உடைகள் மட்டுமல்ல மேக்கப் போட செலவு செய்ததாகவும் ரூ6 லட்சம் கணக்கு காட்டியுள்ளனர். மேக்கப் போட்டுதான் விளையாடுவார்களா? சரி யார் யாருக்கு மேக்கப் போட இந்த பணம் கொடுத்தீர்கள்? ஏன் அந்த விவரத்தை விரிவாக வெளியிடவில்லை?
போக்குவரத்து செலவு
ஸ்டார் கிரிக்கெட் போக்குவரத்துக்கு ரூ20 லட்சம் செலவு செய்ததாக கூறுகிறார்கள். அதாவது கிரிக்கெட் சங்க கணக்கில் ரூ6,18,716; அறக்கட்டளை கணக்கில் ரூ13, 67,052 போக்குவரத்துக்கு என கணக்கு காட்டியுள்ளார்கள். யார் யாருக்காக இந்த பணம் செலவிடப்பட்டது? ஏன் விவரங்களை வெளிப்படுத்தவில்லை?
தங்கும் இடம்...
கிரிக்கெட் போட்டியை ஒட்டி தங்குமிடத்துக்கான செலவு ரூ19 லட்சம் என குறிப்பிட்டுள்ளனர். முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் போட்டி நடத்த மைதானத்துக்கு ரூ25 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறுகிறீர்கள்... அந்த மைதானத்திலேயே கிரிக்கெட் வீரர்களுக்கான 40 அறைகள் உள்ளன. இவை இலவசமாக தங்குவதற்கான இடங்கள்..இருந்தும் யார் யார் ஹோட்டலில் தங்குவதற்கு இந்த பணம் கொடுக்கப்பட்டது?' எங்கே விவரம்?
குடித்து கூத்தடிக்க
அடுத்தது உணவு மற்றும் அத்தனை பானங்களுக்குமான செலவு ரூ21 லட்சமாம்.. ஏழை நடிகர்கள் அடுத்த வேளை சோற்றுக்கு வழியே இல்லாமல் இருக்கின்றனர்... இந்த நிலையில் ஸ்டார் கிரிக்கெட் என்ற பெயரில் ஒருநாள் குடித்து கூத்தடிக்க நடிகர் சங்கம் மற்றும் அறக்கட்டளையின் ரூ21 லட்சம் பணத்தை எடுத்து கும்மாளம் போட்டிருப்பது எவ்வளவு கொடுமையானது?
என்னது விளம்பரம் செய்தீர்களா?
விளம்பரம் செய்ததாக மொத்தம் ரூ17 லட்சம் கணக்கு காட்டியிருக்கிறீர்களே... சன் டிவிக்குதான் ஒளிபரப்பு உரிமத்தை கொடுத்துவிட்டீர்கள்.. அவர்கள்தானே விளம்பரங்களை வாங்கி ஸ்டார் கிரிக்கெட் நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.. நீங்கள் எந்த வகையில் விளம்பரம் செய்தீர்கள் என்பதை ஏன் விளக்கம் தரவில்லை?
ரூ6 கோடி பொய் கணக்கு
இப்படி ஒருநாள் கூத்துக்காக நடிகர் சங்கம் மற்றும் அறக்கட்டளையின் ரூ6 கோடி பணத்தை செலவிட்டதாக பொய் கணக்குகளை காட்டியுள்ளனர். இது பொய் கணக்கு இல்லை என்றால் குண்டூசிக்கும் கணக்கு காட்டுவோம் என்ற நிர்வாகிகள் விரிவாக அதே இணையதளத்தில் பகிரங்கப்படுத்திவிட்டுப் போக வேண்டியதுதானே?
பகிரங்கப்படுத்துங்கள்
நீங்கள் இதில் ஊழல் செய்திருக்கிறீர்கள்... ஊழல் செய்யவில்லை எனில் ஏன் மேலோட்டமாக மட்டும் ஏன் கணக்கு வெளியிட்டீர்கள்? நீங்கள் நேர்மையாளர்கள் எனில் ஒவ்வொரு செலவுக்குமான கணக்கு விவரங்களை பகிரங்கப்படுத்துங்கள் என்பதுதான் என் வேண்டுகோள்.
மோசடி பேர்வழிகள்...
ரஜினி, கமல் மற்றும் அப்பாவி முன்னணி கலைஞர்களை முன்னிறுத்தி அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களை ஏமாற்றி நீங்கள் ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளீர்கள். இந்த ஊழல் மோசடி பேர்வழிகளை கமல், ரஜினி மற்றும் அப்பாவி முன்னணி கலைஞர்கள் அடையாளம் கண்டு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கிறேன்.
இவ்வாறு வாராகி கூறினார்.