அடுத்த எம்ஜிஆர் ஆகிறாரா விஜய்?
Recommended Video
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வர ஆயத்தமாகிறார் என்ற யூகங்கள் திரையுலகில் றெக்கை கட்டி பறந்து கொண்டுள்ளன.
காதல் நாயகனாக திரையில் வலம் வந்த விஜய், இப்போது எம்ஜிஆர் போல திரையில் சமூக அரசியல் பேச ஆரம்பித்துள்ளது இதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
கத்தி, மெர்சல் உள்ளிட்ட சமீபத்தில் வெளியான படங்களில் மிக தைரியமாக சம கால அரசியல் பிரச்சினைகளை பேசியவர் விஜய். விரைவில் வெளியாக உள்ள சர்கார் திரைப்படமும் அரசியல் படம்தான். ஒருவிரல் புரட்சியே என்று துவங்கும் பாடலில் தற்போதைய அரசியல் நிலை வெளுத்து வாங்கப்பட்டுள்ளது.
அனிதா சோகம்
வெறும் திரைப்படங்களோடு விஜய் நிற்கவில்லை. நிஜத்திலும், மக்கள் சார்ந்த அரசியலை முன்னெடுத்து வருகிறார். 1,176 மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வால் மருத்துவக் கல்வி படிக்க முடியாமல் போனவர் அனிதா. உச்சநீதிமன்றம் சென்றும், அவருக்கான நியாயம் கிடைக்காததால், கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அனிதா தற்கொலை செய்து கொண்டார். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், நடிகர் விஜய் செப்டம்பர் 11ம் தேதி, அனிதா வீட்டுக்கு நேரில் சென்று, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அதையும்கூட மீடியா வெளிச்சமின்றி ரகசியமாக செய்தார்.
பல விஷயங்கள்
அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்த ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடும் கமல்ஹாசன் உள்ளிட்ட பிற முன்னணி நடிகள் ட்விட்டரில் தங்களுடைய இரங்கலை தெரிவித்ததோடு, நிறுத்திக் கொண்ட நிலையில், விஜய் அனிதா வீட்டுக்கே நேரில் சென்றார். காவிரி பிரச்சினை, இலங்கைப் பிரச்சினையிலும் விஜய் குரல் கொடுத்தார். ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சம்பெற்றபோது விஜய் காண்பித்த ஆதரவை தமிழ் இளைஞர்கள் மறந்திருக்க முடியாது.
ரஜினிக்கும் விஜய்க்குமான வித்தியாசம்
பணமதிப்பு நீக்கம் அறிவிப்பையடுத்து ரஜினிகாந்த், புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று ட்வீட் செய்தார். ஆனால் இதனால் மக்கள் அவதிப்படுவதாக துணிச்சலாக பேட்டியளித்தார் விஜய். இறுதியில் விஜய் கூறியதுதான் சரி என்பதும், புதிய இந்தியா பிறக்கவில்லை, இருக்கும் இந்தியாவும் அவதிப்பட்டதுதான் மிச்சம் என்பதும் புள்ளி விவரங்களோடு அம்பலமானது. விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு உள்ளிட்ட தமிழர்களை பாதிக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தொடர்ச்சியாக குரல் கொடுத்துவருவது விஜய் என்பது கவனிக்கத்தக்கது.
தூத்துக்குடி விசிட்
மே மே 22ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றபோது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றோர் மீடியா வெளிச்சத்தோடு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால், விஜய் யாருக்கும் சொல்லாமல் அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். சொகுசு கார்களை துறந்து, கரடு முரடான சாலைகளில் பைக்கில் அமர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் பலியான கிளாட்சன், ஜான்சி, ஸ்னோலின் ஆகியோரது வீடுகளுக்கு சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தூக்கத்தை தொலைத்து, அதிகாலை 2.30 மணிக்குதான் தூத்துக்குடியை விட்டு கிளம்பினார்.
அடுத்த எம்ஜிஆர்
தமிழர்கள் பிரச்சினையில் விஜய் காட்டும் அக்கறையும், திரைப்படங்களில் தொடர்ச்சியாக அவர் முன் வைக்கும் அரசியலும் நடிகர் விஜய் எம்ஜிஆரை போல அரசியலுக்கு தயாராகி வருவதை சுட்டிக்காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஏனெனில், எம்ஜிஆருக்கு பிறகு அதிக படங்களில் தொடர்ச்சியாக அரசியல் பேசுவது மற்றும் பாடல்களில் அரசியலை எதிரொலிப்பது விஜய் மட்டும்தான் என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இருப்பினும் விஜய் ரசிகர்மன்ற வட்டாரத்தில் கேட்டபோது, கட்சி துவங்கும் திட்டம் ஏதும் இப்போதைக்கு இல்லை. ஆனால், வரும் லோக்சபா தேர்தலில் விஜய் 'வாய்ஸ்' கொடுக்க கூடும் என்கிறார்கள்.