மெர்சல் விவகாரம்.. பாஜகவுக்கு நடிகர் விஜய் நன்றி கூற வேண்டும்.. கேட்டு வாங்கும் எச் ராஜா!
மெர்சல் படம் வெற்றி பெற்றதற்கு நடிகர் விஜய் பாஜவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என எச் ராஜா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை: மெர்சல் படம் வெற்றி பெற்றதற்கு நடிகர் விஜய் பாஜவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என எச் ராஜா தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் மெர்சல். இப்படத்தில் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்தால் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேசிய அளவில் பேச்சு
மெர்சலுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சசிதரூர் உள்ளிட்டோரும் ஆதரவு குரல் கொடுக்க விஷயம் தேசிய அளவில் பேசப்பட்டது. மெர்சல் படம் அரசியல் ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது.
அதிக வசூல்
இதனால் படத்தில் என்னதான் இருக்கு என பார்க்க மக்களிடையே ஆர்வம் அதிகரித்தது. இதன் வெளிப்பாடாக படம் ரிலீஸான ஒரே வாரத்தில் 170 கோடி ரூபாய் வசூல் செய்தது.
எச் ராஜா கருத்து
பாஜக தலைவர்களின் கருத்தால் தான் படம் பெரும் ஹிட்டானதாக சமூக வலைதளங்களில் கருத்து எழுந்தது. இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
விஜய் நன்றி சொல்ல வேண்டும்
அப்போது பாஜகவால் தான் மெர்சல் படம் வெற்றி பெற்றது என்றால் நடிகர் விஜய்யும் அவரது தந்தையும் பாஜகவுக்கு நன்றி கூற வேண்டும் என்றார். உயிருடன் இருப்பவர்களின் படம் பேனரில் இடம் பெறக்கூடாது என உயர்நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறினார்.
சசிகலாவுக்கு பேசுகிறாரா?
மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றார் என்றும் எச் ராஜா கூறினார். திருநாவுக்கரசர் காங்கிரஸ்க்காக பேசுகிறாரா அல்லது சசிகலாவுக்காக பேசுகிறாரா என்றும் எச் ராஜா கேள்வி எழுப்பினார்.