தலைவன் சரியா இருந்தா எல்லாம் சரியா இருக்கும்.. சரமாரியாக விளாசிய விஜய்
Recommended Video
சென்னை: சர்கார் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய், பேசிய அரசியல் வசனங்கள் யாரை குறி வைத்து என்ற கேள்வி எழுந்துள்ளன.
விஜய் பேசியதாவது: தேர்தலில் போட்டியிட்டு ஜெயிச்சி, சர்கார் அமைப்பாங்க, நாங்கள் சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப்போகிறோம். படத்தை சொன்னேன். பிடிச்சிருந்தா, படத்திற்கு ஓட்டுப்போடுங்க என்றார்.
அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர், பிரசன்னா குறுக்கிட்டு, உங்கள் படத்தின் டைட்டில் வெளியாகும்போது யாராவது சர்ச்சை கிளப்புவாங்க. சர்கார் டைட்டில் வந்த பிறகும் சர்ச்சை எழுந்துள்ளது. நீங்கள் இப்படத்தில் முதலமைச்சராக நடிப்பதாக துணுக்கு செய்தி பார்த்தேன் உண்மையா என்றார்.
[அடுத்த எம்ஜிஆர் ஆகிறாரா விஜய்?]
அதற்கு விஜய், நான் படத்தில் முதல்வராக நடிக்கவில்லை என்று பதில் அளித்தார்.
முதல்வரானால்
இதன்பிறகு பிரசன்னா கூறுகையில், "ஒருவேளை நிஜத்தில் முதலமைச்சரானால்" என்றார். பதிலளித்த விஜய், நிஜத்தில் முதல்வரானால், முதல்வராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன் என்று சொல்ல வந்தேன் என்றார் விஜய். இதையடுத்து பிரசன்னா, யூகத்தின் பேரில் ஒரு கேள்வி கேட்கிறேன். ஒரு காலம் வந்து, உங்களை கூப்பிடுவார்கள். அப்போதும் நீங்கள் இப்போது வந்த மாதிரி வருவீர்கள். அப்படி நீங்கள், முதல்வரானால் மாற்ற வேண்டிய விஷயம் என்று நிறைய இருக்கிறது. முதல் விஷயம் என்னவாக இருக்கும் என்றார். பதிலளித்த விஜய், எல்லாரும் சொல்வதுதான். லஞ்சம் ஊழல் ஒழிக்க என்ன நடவடிக்கையோ அதை எடுப்பேன். ஒழிப்பது ஈஸியான வேலை இல்லை. நமது வாழ்க்கையில் பழகிப்போய் இருக்கிறோம். வைரஸ் மாதிரி பரவிவிட்டது. ஆனால் ஒழித்துதான் ஆக வேண்டும்.
மேல் மட்டம் சரியாக இருக்க வேண்டும்
ஒரு குட்டிக் கதை உள்ளது. ஒரு மன்னர் பரிவாரத்தோடு ஒரு இடத்திற்கு போகிறார். கடைத்தெருவிற்கு போகிறார். கூட இருக்கும் சிப்பாய்கள் எலுமிச்சை சாறு ரெடி பண்ணி கொடுக்கிறார்கள். கூடுதலாக உப்பு போட்டு தர சொல்கிறார் மன்னர். உப்பு இல்லை. கடைத்தெருவில் போய் எடுத்துவிட்டு வா என்கிறார் ஒரு சிப்பாய். ஆனால் மன்னரோ இலவசமாக எடுக்க கூடாது, காசு கொடுத்து வாங்கி வா என்கிறார். அதற்கு சிப்பாய் சொல்கிறார், இதெல்லாம் பெரிசு இல்லை. கொஞ்சம் உப்புதானே என்று. ஆனால், மன்னர், சொல்வார் "மன்னரே காசு கொடுக்காம எடுத்தால், பின்னால் வரும் எனது பரிவாரம் மொத்த ஊரையும் கொள்ளையடிக்கும்" என்றார். அதுதான் மன்னர். நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஒரு மாநிலம் இப்படி இருந்தால் நல்லா இருக்கும். மேல் மட்டத்தில் இருப்பவர்கள் கரெக்ட்டா இருந்தால் ஆட்டோமெட்டிக்கா எல்லாருக்கும் பயம் வரும். மரண சான்றிதழுக்கு கூட காசு. இறந்தும் இறக்காதவர்.
தலைவன் மோசமா இருந்தால் முடிஞ்சது
கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் ஏன் வாங்குகிறார்கள் என்றார் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் வாங்குறதால. மன்னர் எவ்வழியோ அவ்வழிதானே குடிகள். தலைவர் ஸ்ட்ராங்கா, நல்லவனா இருந்தா, ஆட்டோமெட்டிக்கா அந்த கட்சி நல்ல கட்சியா இருக்கும். காந்தி கையில் இருக்கும்போது காங்கிரஸ் ரொம்பவே நல்ல கட்சியாக இருந்தது என்றால், காந்தி அநியாயத்திற்கு நல்லவர். ஒரு நேருதான், வல்லபாய் பட்டேல், காமராஜர், ராஜாஜிதான் காந்தியை பின்பற்ற முடியும். அயோக்கியன் அவரை பின்பற்ற முடியாது. தலைவனே படுமோசமா இருந்தா முடிஞ்சது கதை. கமான்டா நமக்கான ஏரியா, கட்சி இதுதான்டா எம்பார்கள் தலைவர் எந்த வழியோ அதுதான் மற்றவர்களுக்கு.
தலைவன் வருவான்
தர்மம்தான், நியாயம்தான் ஜெயிக்கும். கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும். அங்க ஒருத்தன் வருவான் பாருங்க. புழுக்கம் ஏற்பட்டால் மழை வருவது போல ரொம்ப நெருக்கடி ஏற்பட்டால் தகுதியான மனிதர்கள் தானாக உள்ளே வந்து சேர்த்துவிடும். அங்க ஒருவன் வருவான் அடிபட்டு நொந்து, அவன் தலைவராக மாறுவான். அவனுக்கு கீழ நடக்கும் பாருங்க ஒரு சர்கார். இவ்வாறு விஜய் பேசினார். இந்த அரசியல் பேச்சுக்கு நடுவே ரசிகர்கள் விசில், கைதட்டல்கள் பறந்தன. அரங்கமே அதிர்ந்தது.