"ஆறுச்சாமி"யே சொல்லியாச்சு.. தெருக்கள்தோறும் சிசிடிவிகள் பெருகட்டும்.. திருடர்கள் தெறித்து ஓடட்டும்
நடிகர் விக்ரம் சிசிடிவி அவசியம் குறித்து குறும்படம் வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: நவீன விஞ்ஞானத்தின் அஸ்திரம்... காவல்துறையின் மூன்றாவது கண்.. கொள்ளையர்களின் மிக தீவிரமான எதிரி... பொதுமக்களின் 24 மணி நேர நண்பன் சிசிடிவி காமராக்கள்தான்!!
இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதும், தவிர்க்க முடியாததுமாக இந்த சிசிடிவி கேமராக்கள் அமைந்துவிட்டன. குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்யவும் இவைகளின் பங்கு கொஞ்சநஞ்சமல்ல.
காவல்துறைக்கு உதவி
குற்றங்கள் என்று மட்டும் இல்லை, அசம்பாவிதங்கள், வாகன விபத்துகள் போன்றவற்றின் நிஜத்தன்மையை வெளிச்சம் போட்டு காட்ட உதவுவது இந்த சிசிடிவி காமராக்களே. இந்த காமிராவின் முக்கியத்துவம் எங்கும் பெருக வேண்டும் என்பதற்காகவும், குற்றவாளிகளை எளிதில் பிடிக்க அனைத்து இடங்களில் இந்த காமிராக்களை பொருத்த வேண்டும் என்றும் நீண்ட காலமாகவே போலீசார் சொல்லி வருகிறார்கள்.
மூலை முடுக்கெல்லாம்...
இதற்காகவே பல்வேறு இடங்களில், கடைகளில், தெருக்களில், மால்களில், என்று மூலை முடுக்கெல்லாம் வைக்கப்பட்டு, அது காவல்துறைக்கு பெரிய அளவில் கை கொடுத்து வருகிறது. அதன்படி சிசிடிவி கேமராவின் முக்கியத்துவம் குறித்து நடிகர் விக்ரம் ஒரு விழிப்புணர்வு குறும்படத்தினை நடித்து வெளியிட்டுள்ளார் என்பதுதான் தற்போதைய சிறப்பே. அந்த குறும்படத்திற்கு "மூன்றாவது கண்" என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
குற்றங்கள் குறையும்
அந்த வீடியோவில், பொதுமக்களும், வியாபாரிகளும், தங்களின் வீடு, கடை, தெரு என்ற பல இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினால் குற்றங்கள் குறையும் என்றும், அதுதான் நமக்கும் பாதுகாப்பு என்றும் விக்ரம் வலியுறுத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
போலீஸ் சிறப்பா செய்றாங்க
சிசிடிவி காமிராக்கள் ஆங்காங்கே வைக்கப்பட வேண்டும் என்ற போலீஸ் கமிஷனரின் அறிவுறுத்தல்படியே இந்த குறும்பட தகடும் வெளியிடப்பட்டுள்ளது. அதனால்தானோ என்னவோ ஒன்றரை நிமிடமே அந்த வீடியோ ஓடினாலும், அதில் விக்ரம் "போலீஸ் அவங்க வேலையை சிறப்பாக செய்றாங்க"ன்னு ஒரு பஞ்ச்சும் வைத்துள்ளார்.
ஆறுச் சாமியையே சொல்ல வச்சாச்சு.. இனிமேல் தெருக்கள் தோறும் சிசிடிவி கேமராக்கள் பெருகட்டும்.. திருடர்கள் தெறித்து ஓடட்டும்!