நடிகர் விக்ரமின் மகன் கார் ஓட்டி விபத்து.. கைதாகி ஜாமீனில் விடுதலை
நடிகர் துருவ கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் ஆட்டோக்கள் சேதமடைந்தன.
சென்னை: நடிகர் விக்ரமின் மகன் காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில், 3 ஆட்டோக்கள் சேதமடைந்தன. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் சிறிது நேரத்தில் ஜாமீனில் விடுவித்தனர்.
நடிகர் விக்ரமன் மகன் துருவ். இவர் தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். ஏற்கனவே தெலுங்கில் ஹிட்டான அர்ஜன் ரெட்டி என்ற படம்தான் தற்போது தமிழில் ரீமேக்கிங் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் துருவ், தனது நண்பர்கள் 3 பேரை காரில் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். தேனாம்பேட்டையில் உள்ள போலீஸ் கமிஷனர் வீடு அருகே சென்ற நிலையில், அவரது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோக்கள் மீது மோதியது. இதில் 3 ஆட்டோக்கள் பலத்த சேதமடைந்தன. அந்த ஆட்டோக்களில் ஒன்றில், படுத்திருந்த டிரைவர் ஒருவரும் படுகாயமடைந்தார்.
அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்போதும் அந்த கார் நிற்காமல் சற்று தூரம் சென்று ஒரு பள்ளத்தில் சிக்கி கொண்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பாண்டிபஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த ஆட்டோ டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் விபத்து பற்றி விசாரித்த போலீசார் துருவ் மீது அதிகவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் என்பது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவரை ஜாமீனில் விடுவித்தனர்.