டயரே இல்லாத வண்டி ம.ந.கூட்டணி.. கடைசி வரைக்கும் நிற்குமே தவிர நகராது - நடிகை விந்தியா அட்டாக்
சிதம்பரம்: டயரே இல்லாத வண்டி மக்கள் நலக்கூட்டணி. அது கடைசி வரை நிற்குமே தவிர நகராது என்று அதிமுக நட்சத்திரப் பேச்சாளர் நடிகை விந்தியா சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் விந்தியாவின் பேச்சில் அனல் பறக்கிறது. திமுக, தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி என அனைவரையும் பிரச்சாரத்தில் சகட்டு மேனிக்கு திட்டி பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார்.
சிதம்பரம் மேலரத வீதியில் இன்று நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.பாண்டியனை ஆதரித்து அதிமுக பேச்சாளரும், நடிகையுமான விந்தியா வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தில்லை நடராஜரையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ, அந்நாளோ எனக்கு திருநாள் என்று சொன்னவர் கருணாநிதி. எனவே நடராஜரை உடைக்க நினைக்கிற கருணாநிதிக்கு ஒட்டு போடுவீர்களா, மக்களுக்காக நல்லாட்சி தரும் ஜெயலலிதாவிற்கு ஓட்டு போடுவீர்களா என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறுகையில், திருமாவளவன் மீது மரியாதை வைத்திருந்தேன். ஆனால் விஜயகாந்தை, அம்பேத்கர் வடிவில் காண்கிறேன் என கூறியதை கேட்டபின் திருமாவளவன் மீது இருந்த மரியாதை போய்விட்டது.
கடந்த தேர்தலில் விஜயகாந்த் தண்ணி வண்டி, குடிகாரன் என கூறிய திருமாவளவன், தற்போது அவரை கண்ணியமான அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசி வருகிறார். டயரே இல்லாத வண்டி மக்கள் நலக்கூட்டணி. அந்த வண்டி கடைசி வரைக்கும் நிற்குமே தவிர நகராது. தமிழ்நாட்டு அரசியலில் பகல் கனவு காணுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றும் ஒரே தலைவி ஜெயலலிதா மட்டும்தான் என நடிகை விந்தியா பேசினார்.