கேளிக்கை வரி விவகாரம்.. இன்று சுமூக முடிவு எட்டப்படும்.. விஷால் நம்பிக்கை
சென்னை: கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு சுமூகமான முடிவு இன்று கிடைக்கும் என அமைச்சர்கள் தெரிவித்தாக நடிகர் விஷால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திரையரங்குகள் மீது 28 சதவீத ஜிஎஸ்டிவரியை மத்திய அரசு விதித்துள்ளது. இதனால், மாநில அரசால் கேளிக்கை வரியை விதிக்க முடியாது. இருப்பினும் தமிழக அரசோ, 30 சதவீத கேளிக்கை வரியை உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கும் வகையில், சட்டத்திருத்தம் செய்துள்ளது. இதனால் இரு வரிகளையும் சேர்த்து கட்டும் நிலைக்கு தமிழக சினிமாத்துறை தள்ளப்பட்டுள்ளது.
கேளிக்கை வரியை ரத்து செய்யகோரி திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் அபிராமி ராமநாதன் தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேற்றும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், தமிழக அரசுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் வரை திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.
மேலும் திரைப்படத்திற்கான மாநில அரசின் கேளிக்கை வரியை நீக்ககோரி இன்று அமைச்சர்களை சந்தித்த பின்னர் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அபிராமி ராமநாதன் தெரிவித்தார். தாங்கள் ஜிஎஸ்டியை எதிர்க்கவில்லை என்றும், கேளிக்கை வரியை தான் தாங்கள் எதிர்ப்பதாகவும் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.
இதனிடையே தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், சூர்யா ஆகியோர் நேற்று சந்தித்தனர். கேளிக்கை வரியை ரத்து செய்ய அவர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விதித்துள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். மற்ற மாநிலங்கள் போல் ஒரே வரி விதிப்பு முறை வேண்டும். கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு நல்ல முடிவு இன்று கிடைக்கும் என அமைச்சர்கள் தெரிவித்தனர் என்றார் விஷால். கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி, தமிழகத்தில் திரையரங்குகள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றன.