ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டி? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் புதிய திருப்பமாக நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிடக் கூடும் என கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆர்.கே.நகரில் அதிமுகவின் மதுசூதனன், திமுகவின் மருது கணேஷ், சசிகலாவின் அக்காள் மகன் தினகரன், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். திமுகவுக்கு காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளன.
தேமுதிக, பாமக, மார்க்சிஸ்ட், தமாகா ஆகியவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளன. இந்த கட்சிகள் தங்களுக்கான ஆதரவையும் தெரிவிக்கவில்லை.
இத்தேர்தலுக்காக இன்று மதுசூதனன், மருதுகணேஷ், தினகரன் ஆகியோர் வேட்புமனுவைத் தாக்கல் செய்கின்றனர். இந்த நிலையில் புதிய திருப்பமாக ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஷால் இன்று வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்களில் போட்டியிட்ட வென்ற தெம்புடன் ஆர்.கே.நகரிலும் களமிறங்கலாம் என விஷால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.