மதுசூதனன் தரப்பு மிரட்டினர்.. ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டார் விஷால்!
அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தரப்பினர் மிரட்டியதாக குற்றம்சாட்டி இருந்த நடிகர் விஷால் அதற்கான ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.
சென்னை : வேட்பு மனுவை முன்மொழிந்தவரை அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தரப்பினர் மிரட்டியதாக நடிகர் விஷால் கூறி இருந்ததற்கான ஆடியோ ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் புகாரை மதுசூதனன் தரப்பு மறுத்துள்ளது.
ஆர்கே நகர் தேர்தலில் களமிறங்கிய நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவரின் வேட்பு மனுவில் முன்மொழிந்து கையெழுத்திட்ட இரண்டு பேர் பின்வாங்கினர். மனுவில் இருப்பது தங்களின் கையெழுத்து அல்ல என்று அவர்கள் கூறியதால் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து விஷால் தர்ணாவில் ஈடுபட்டார். இதனிடையே முன்மொழிந்தவர்களை அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தரப்பினர் மிரட்டியதாக நடிகர் விஷால் குற்றம்சாட்டியிருந்தார்.
மதுசூதனன் ஆட்கள் மிரட்டல்
இதனிடையே முன்மொழிந்ததை திரும்பப்பெற்ற பெண்ணின் உறவினரான வேலு என்பவருடன் நடிகர் விஷால் பேசும் தொலைபேசி ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் விஷால் வேலு என்பவரிடம் முன்மொழிந்ததை திரும்பப் பெற்றிருக்கிறாரா அந்தப் பெண் என விஷால் கேட்க அதற்கு வேலு மதுசூதனனின் ஆட்கள் வீட்டில் இருந்த பெண்களை மிரட்டியதாக கூறுகிறார்.
மிரட்டலுக்கு பயந்து
தேர்தல் அதிகாரி அலுவலகம் எதிரே ஒரு கட்டிடத்தின் அறையில் வைத்து மிரட்டியதோடு, கத்தையாக பணத்தையும் தந்ததாக வேலு கூறுகிறார். அதற்கு அப்படியானால் பணத்திற்கு விலைபோய்விட்டீர்களா என்று விஷால் கேட்க பணம் வாங்கவில்லை, நான் உங்கள் கட்சியில் தான் சேரப்போவதாக சொன்னேன். ஆனாலும் மிரட்டலுக்கு பயந்து பெண்கள் கையெழுத்து போட்டுவிட்டனர்.
உண்மையை சொல்லுங்கள்
அவர்களை நேரில் அழைத்து வந்து இதை சொல்லச் சொல்லி விஷால் கேட்க டிவியில் வந்துவிடுவோம் என்று பயந்து அவர்கள் அழுதுகொண்டிருப்பதாக வேலு கூறுகிறார். நான் மிரட்டவில்லை உண்மைக்காக போராடுகிறேன் அவர்களை வந்து உண்மையை மட்டும் சொல்லச் சொல் என்று விஷால் கூறுகிறார்.
நாங்கள் இல்லை
ஆனால் விஷாலின் இந்த குற்றச்சாட்டை மதுசூதனன் தரப்பினர் மறுத்துள்ளனர். உண்மைக்கு புறம்பாக விஷால் பேசுகிறார் என்றும். விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் வேலு சொல்லும் மதுசூதனன் தரப்பை சேர்ந்த ராஜேஷ் என்பவர் விளக்கம் அளித்துள்ளார்.