ஆர்கே நகர் தேர்தல் போதே அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறும் நடிகர் விஷால் புதிய கட்சியை தொடங்குகிறாரா?
நடிகர் விஷால் புதிய கட்சியை தொடங்குகிறாரா என்பது அவர் அவர் பரிசீலனை செய்து வருவதாக கூறியுள்ளார்.
மதுரை: ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போதே அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறிய நடிகர் விஷால் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அதில் போட்டியிடுவேன் என்று நடிகர் விஷால் தெரிவித்தார். அப்போது அவர் ஏற்கெனவே நடிகர் சங்க தலைவர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ளதால் மற்றொரு பதவியில் போட்டியிட கூடாது என்று இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் போர்க் கொடி உயர்த்தினர்.
தமிழக அரசியல் கட்சிகளை எதிர்த்து கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் சினிமா துறையில் பெற்றுள்ள பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இதையும் மீறி விஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஆனால் அவரை முன்மொழிந்ததாக கூறி வேட்புமனுவில் கையெழுத்திட்டவர்கள் திடீரென முன்மொழிய மறுத்துவிட்டதால் அவர்கள் போட்ட கையெழுத்து செல்லாததாகிவிட்டதாக தேர்தல் ஆணையம் கருதியது. இந்நிலையில் அவரது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து சுயேச்சை ஒருவரை ஆதரித்து பிரசாரம் செய்ய போவதாக கூறிய விஷால் ஆர்கே நகரை எட்டிக் கூட பார்க்கவில்லை. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை விஷால் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். புதிய கட்சி தொடங்குவது குறித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பரிசீலனை செய்யவுள்ளேன் என்றார்.