சங்க விதிகளின் படி நடவடிக்கை எடுப்போம்.. சேரனுக்கு விஷால் மிரட்டல்
Recommended Video
சென்னை : தயாரிப்பாளர் சங்கபொறுப்பில் இருப்பவர் சட்டமன்ற தேர்தலில் நிற்கக்கூடாது என சட்டவிதி எதுவுமில்லை வீண் விளம்பரம் தேடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இயக்குனர் சேரனுக்கு விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவதென்றால் நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இயக்குனர் சேரன் போர்க்கொடி தூக்கியுள்ளார். கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சேரன் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் சேரனுக்கு நடிகர் விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் இயக்குனர் சேரனின் செயல்கள் தொடர்ந்தால் சங்க விதிகள்படி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்து மிரட்டி காரியம் சாதிக்க முயற்சிக்கும் எந்த ஒரு செயலையும் சங்கம் அனுமதிக்காது.
சமீபகாலமாக சேரன் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தைத் தான் ஏற்படுத்துகின்றன. சேரன் இனிமேலாவது திருந்தி வீண் விளம்பரங்கள் தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்யமான மனோபாவத்துக்கு மாற வேண்டும்.
ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக் கூடாது என்று எந்த சட்டவிதியும் இல்லை. ஆர்கே நகர் தேர்தலில் நிற்பது எனது தனிப்பட்ட முடிவு. சேரனின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தயாரிப்பாளர் சங்கபொறுப்பில் இருப்பவர் சட்டமன்ற தேர்தலில் நிற்கக்கூடாது என சட்டவிதி எதுவுமில்லை. இதே போன்று தேர்தலில் போட்டியிட்டால் தயாரிப்பாளர் சங்கத்தை அரசு பழிவாங்கும் என்பது ஜனநாயகத்துக்கு எதிரான புகார் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.