"எங்களை கைவிட்டுடாதீங்க" உருகிய விஷால்.. "எங்க விஷால் அண்ணன் படிக்க வெச்சாரு" நெகிழ்ந்த மாணவிகள்
கல்வி அறக்கட்டளை மாணவர்களை விஷால் சந்தித்து பேசினார்
சென்னை: "எங்க விஷால் அண்ணன் படிக்க வெச்சாரு.. இப்போ எப்படி இருக்கோம் பாருங்கன்னு கண்டிப்பா எல்லாரையும் சொல்ல வைப்போம்" என்று மாணவி ஒருவர் நெகிழ்ச்சியுடன் நடிகர் விஷால் முன்னிலையில் தெரிவித்தார்.. இதையடுத்து, "எங்களை நீங்கதான் காப்பாத்தணும்.. எங்களை கைவிட்டுடாதீங்க" என்று தன் அறக்கட்டளை மூலமாக படித்துவரும் மாணவ, மாணவிகளிடம் விஷால் வேண்டுகோள் விடுத்தார்.
நடிகர் சூர்யா எப்படி அகரம் என்ற அறக்கட்டளையை ஆரம்பித்து ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவி வருகிறாரோ, அதுபோலவே நடிகர் விஷாலும் பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்பே இந்த உதவிகளை விஷால் செய்ய ஆரம்பித்துவிட்டார்.. ஆனால் குறிப்பிட்ட எந்த அமைப்பையும் உருவாக்காமல் தனிப்பட்ட முறையிலேயே அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவினார்.. இதுபோக அரசுப் பள்ளிகளுக்கு அடிக்கடி சென்று பார்வையிட்டும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லையெனில், அதையும் செய்து கொடுத்து வந்தார்.
சின்னஞ்சிறிய வயதில் எத்தனை நேர்த்தி.. வேத மந்திரங்களை முழங்கி பூஜை செய்யும் பிஞ்சு.. வைரல் வீடியோ
மருத்துவ வசதிகள்
இதற்கு பிறகுதான் தன்னுடைய அம்மா பெயரில் ‘தேவி சமூகம் மற்றும் கல்வி அறக்கட்டளை' ஒன்றினை ஆரம்பித்து, அதன் மூலம் , ஏழை மாணவிகளுக்கு உதவி செய்து வருகிறார். குறிப்பாக, 12-ம் வகுப்பு முடித்தும், மேற்படிப்பு தொடர முடியாத எழை, மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க உதவுகிறார். அது மட்டுமில்லை, வயதானவர்கள், குழந்தைகள் என எத்தனையோ பேர் மருத்துவ வசதிக்கும் இவரது உதவி நீண்டு வருகிறது.
புது ஆப்
"பாதிக்கப்பட்ட எத்தனையோ பேர் உதவி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.. அதேபோல, இவர்களுக்கு உதவுவதற்கு பலர் காத்து கொண்டும் இருக்கிறார்கள்.. ஆனால் அவர்களை ஒன்றிணைக்க முறையான வசதி இல்லை.. அதற்காகத்தான் ஒரு ஆப் தொடங்க போகிறேன்" என்று சொல்லி, புது செயலி ஒன்றினையும் விஷால் தொடங்கினார்.. அந்த ஆப்பிற்கு "வி ஷெல்" என்றும் பெயரிட்டார்.
நெகிழ்ச்சி
இந்நிலையில், தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலம் படித்துவரும் மாணவ, மாணவியர்களை விஷால் நேரில் சந்தித்து பேசினார்.. விஷாலை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு, தங்கள் நன்றியை உரித்தாக்கினார்கள். அப்போது ஒரு மாணவி விஷால் முன்னிலையில் நெகிழ்ச்சியாக பேசியதாவது:
விஷால் அண்ணன்
"உங்களைதான் சார் நாங்க இன்ஸ்பையரா நாங்க எடுத்துக்கறோம்.. இன்னைக்கு உங்களாலதான் நாங்க இவ்வளவு படிக்க முடியுது.. நாங்க நல்லா படிச்சு உங்க பேரை கண்டிப்பா காப்பாத்துவோம்.. எங்க விஷால் அண்ணன்தான் எங்களை படிச்ச வெச்சாரு.. இப்போ எப்படி இருக்கோம் பாருங்கன்னு நாங்க நிரூபிப்போம்... எங்க வீட்ல அப்துல்கலாம் ஐயா போட்டோவுக்கு கீழே உங்க போட்டோவும் வெச்சிருக்கோம்" என்றதுமே கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பினார்கள்.
உங்களுக்குதான்
இதை தொடர்ந்து அவர்களிடம் விஷால் பேசியபோது, "நான் சம்பாதிக்கிற காசுல எங்க அம்மா, அப்பாவுக்கு சாப்பாடு போட்டுடுவேன்.. ஆனால் இந்த சமுதாயத்துக்கு ஏதாவது நான் நல்லது செய்யணும்னுதான் படிக்க ஆர்வமா இருக்கிற பிள்ளைகளுக்கு உதவுறேன்.. நான் இன்னைக்கும் உழைக்கிறேன்னா அது உங்களுக்காகத்தான்.
கைவிட்டுடாதீங்க
சேவைன்னு வந்துட்டா தயவுசெய்து யோசிக்காதீங்க.. அவங்களுக்கு அந்த நேரத்துல கை தூக்கி விடுங்க.. நீங்க நல்லா படிச்சு மேல வரணும்.. உங்களில் டாக்டரோ, என்ஜினியரோ, வக்கீலோ.. இப்படி வரணும்.. நாங்க காத்துக்கிட்டு இருக்கோம்.. எங்களை கைவிட்டுடாதீங்க.. நாங்க படிப்புக்கான வசதிகள்தான் செஞ்சு தர முடியும்.. ஆனா படிச்சு முடிச்சதும் நீங்கதான் எங்களை காப்பாத்தணும்" என்று மாணவ, மாணவிகளிடம் விஷால் உருக்கமாக பேசினார்.