முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் நடிகர் விவேக் சந்திப்பு
சென்னையில் மரங்கள் நடுவது தொடர்பாக முதல்வர் பன்னீர் செல்வத்தை நடிகர் விவேக் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் பன்னீர் செல்வத்தை, நடிகர் விவேக் சந்தித்து பேசியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று மதியம், முதல்வர் பன்னீர்செல்வத்தை நடிகர் விவேக் சந்தித்தார். சிறிது நேர ஆலோசனைக்கு பிறகு வெளியே வந்த விவேக் நிருபர்களிடம் கூறியதாவது: வர்தா புயலால் சென்னையில் பல ஆயிரம் மரங்கள் முறிந்தும், சரிந்தும் போயுள்ளன. மரங்களை மக்கள்தான் காப்பாற்ற வேண்டும். வெளிநாட்டு மரங்கள் நமது மண்ணுக்கு பொருந்தாதவை.
எனவே, நமது மண்ணுக்கு ஏற்ப, மா, பலா, அரச மரங்களை அதிகம் நட வேண்டும். இந்த புயலுக்கு வெளிநாட்டு வகையான, வாகை மரமும், ஆலமரமும் தாக்குப் பிடிக்கவில்லை என்பது கண்கூடு. அரச மரம் தாக்குப்பிடித்தது. எனவே ஆந்திராவின் ராஜமுந்திரியிலிருந்து மரங்களை பெயர்த்து எடுத்து வந்து, சென்னையில் நடவு செய்ய வேண்டும் என்று, முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இவ்வாறு விவேக் தெரிவித்தார்.
மரங்களை நடுவது குறித்து அரசுடன் பேச உள்ளேன் என விவேக் ஏற்கனவே டிவிட்டரில் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.