லீ குவான் யுவிற்கு இறுதி மரியாதை... கலங்கிய விவேக்
சென்னை: சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யு அவர்களை ஒரு முறையேனும் சந்தித்துவிடலாம் என்று நான் நினைத்திருந்தேன் ஆனால் எனது ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது என்று நடிகர் விவேக் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம் ஒட்டுமொத்த மக்களையும் வேதனையில் ஆழ்த்தியது. அங்கு வாழும் தமிழர்கள் தங்கள் உறவினர் ஒருவரை இழந்தது போல உணர்ந்தனர்.
லீ குவான் யூ அவர்களின் மீதுள்ள மரியாதையால் அவரை நேரில் சந்தித்து கலந்துரையாட வேண்டும் என்பது நடிகர் விவேக்கின் கனவு. இதற்காக அவர் லீ குவான் யூவை சந்திக்க அனுமதி கேட்டு கடந்த ஐந்து வருடங்களாக காத்திருந்தார். ஆனால் உடல்நலக்குறைவினார் கடந்த 23ஆம் தேதி அவர் மரணமடைந்தார்.
உயிருடன் இருக்கும்போதுதான் அவரை சந்திக்க முடியவில்லை. மரணம் அடைந்துவிட்ட அந்த மாமனிதரின் உடலுக்காவது அஞ்சலி செலுத்திவிட வேண்டும் என்று துடித்த விவேக் உடனடியாக சிங்கப்பூர் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். லீயின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் நடைபெற்ற சம்பவங்களை பத்திரிகை ஒன்றிர்க்கு பகிர்ந்துள்ளார்.
சந்திக்க முடியவில்லை
நான் சிங்கப்பூருக்கு ஷூட்டிங்கிற்காகவும் கலை நிகழ்ச்சிகளுக்காகவும் பல முறை சென்றிருக்கிறேன். எப்படியாவது லீ குவான் யூவை சந்தித்து விடவேண்டும் என விரும்பினேன். லீ குவான் யூவை சந்திக்க உலகத் தலைவர்களுக்கே அத்தனை எளிதாக நேரம் கிடைப்பதில்லை. என்றாவது ஒரு முறை அவரை சந்தித்துவிடலாம் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது.
தமிழருக்கு முக்கியத்துவம்
சிங்கப்பூரில் தொடர்ந்து 31 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். சிங்கப்பூரின் ஆட்சி மொழியாக சீனா, மலாய், தமிழ் மூன்றுக்கும் இடம் தந்தவர் லீ குவான் யூ. அரசாங்கத்திலிருந்து அறிக்கையோ, ஆணையோ எது வெளியானாலும் அது தமிழிலும் வெளியிடப்படவேண்டும் என்பது அவரது உத்தரவு.. சிங்கப்பூரில் உள்ள மற்ற இந்திய வம்சத்தினர், "தமிழுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்' என்று அவரிடம் கேட்டபோது, "நீங்கள் எல்லாம் வாணிபம் செய்ய எங்கள் நாட்டுக்கு வந்தவர்கள். தமிழர்களோ எங்களுடன் விடுதலைக்காகப் போராடி உயிர் தந்தவர்கள்' என்று பதில் கொடுத்தவர் லீ. அதற்கான நன்றியுணர்வை தமிழர்கள் அவருக்கு செலுத்திய அஞ்சலியின் மூலம் கண்ணீர் மல்க வெளிப்படுத்தினர்.
கடமை, கண்ணியம்
லீயின் மரணத்திற்கு சிங்கப்பூர் வாசிகள் மிக நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.. 8 மணி நேரம் காத்திருந்த போதும் எல்லோருமே கண்ணியத்தோடும் கட்டுப்பாடோடும் இருந்தனர். அஞ்சலி செலுத்த வந்த ஏறத்தாழ 5 லட்சம் மக்களுக்கும் அரசாங்கம் சார்பிலேயே உணவுப் பொட்டலமும் குடிநீரும் இலவசமாக வழங்கப்பட்டது. டீ, காபியும் கொடுத்தார்கள். அத்தனை பேருக்கும் வழங்கப்பட்டபோதும் குப்பைகளை கண்ட இடங்களில் போடவில்லை.
தூய்மை நகரம்
ஏனெனில் லீ குவான் யூ சுத்தத்தையும் சுகாதாரத்தையும் மக்களிடம் வலியுறுத்தினார். அவர்களையும் செயல்படுத்த வைத்தார். தூய்மையான நாடாக சிங்கப்பூரை மாற்றினார். எனவேதான் அவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் போதும் அத்தனை சுத்தமாக சிங்கப்பூர் மக்களும் அரசு நிர்வாகமும் தங்கள் மாபெரும் தலைவரின் மரண நேரத்திலும் கட்டுப்பாட்டுடனும் கடமையுணர்ச்சியுடனும் செயல்பட்டனர்.
பசுமை நகரமாக்கியவர்
வெறும் மணல் மட்டுமே நிறைந்திருந்த தீவான சிங்கப்பூரை கார்டன் சிட்டி என்று சொல்லும் வகையில் பசுமையான பூமியாக மாற்றியவர் லீ குவான் யூ. உலகத்தில் மரம் நடுவதை ஓர் இயக்கமாக முதன் முதலில் மாற்றியவர் அவர்தான். 1963ஆம் ஆண்டில் அவரே மரக்கன்றுகளை நட்டு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
முன்னோடி தலைவர்
மரம் வளர்ப்பில் உலக சாதனை படைத்தார். நமது முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் வழிகாட்டுதலில் தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகளை நடும் பணியை மேற்கொண்டு இதுவரை 24 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறேன். இந்தப் பணியில் லீ குவான் யூ தான் எனக்கு முன்மாதிரி. நாட்டின் முன்னேற்றத்திற்காக தன்னையே அர்ப்பணித்த அந்த மாமனிதருக்கு நேரில் அஞ்சலி செலுத்தியது எனக்கு மனநிறைவைத் தருகிறது என்று கூறியுள்ளார் நடிகர் விவேக். லீ குவான் யு விற்கு தமிழ்நாட்டில் இருந்து அஞ்சலி செலுத்தச் சென்ற நடிகர் விவேக் உடன் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சி இயக்குநர் ராஜ்குமாரும் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.