பொங்கல்தான் தமிழர் பண்டிகை.. மற்றதெல்லாம் இரவல்.. ஜல்லிக்கட்டை நடத்த விடுங்க.. விவேக் ஆவேசம்
பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டை நடத்த விடுங்கள் என்று நடிகர் விவேக் குரல் கொடுத்துள்ளார். பொங்கல்தான் தமிழர் பண்டிகை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: பொங்கல்தான் தமிழர் பண்டிகை மற்றதெல்லால் இரவல் என்றும் பொங்கல் நன்னாளில் ஜல்லிக்கட்டை நடத்த விடுங்கள் என்றும் நகைச்சுவை நடிகர் விவேக் கூறியுள்ளார்.
பொங்கலுக்கு இன்னும் ஒரே நாளே உள்ளது. இன்னும் ஜல்லிக்கட்டுக்கான எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. ரயில் மறியில், சாலை மறியல், பேரணி, வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம், உள்ளிருப்புப் போராட்டம் என போராட்டங்கள் மட்டும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நகைச்சுவை நடிகர் விவேக் ஜல்லிக்கட்டு குறித்து கூறியதாவது: ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. ஏறுதழுவுதல், மாடு அணைத்தல் இப்படி அதற்கு பல பெயர்கள் உள்ளன. அந்த விளையாட்டு பொங்கல் அன்று நடைபெறுவது நமது பாரம்பரியம். பொங்கல் மட்டும்தான் தமிழர் பண்டிகை. மற்றதெல்லாம் இரவல் வாங்கியதுதான்.
தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தவில்லை என்றால் காளைகள் அழிந்துவிடும். காளைகள் அழிந்தால் நாட்டுப் பசு அழிந்துவிடும். நாட்டுப்பசு அழிந்தால் மக்கள் நிலை என்னவாகும்? அயல் பசுக்களை தமிழ்நாட்டிற்குள் வருவதற்கான சூழ்ச்சிதான் இது என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டின் நடைபெற்று வரும் வீரவிளையாட்டு இது. இதன் மீதான தடை நீக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்ற போராட்டம் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. எனவே, இந்த ஆண்டோடு என்னென்ன சட்ட சிக்கல்கள் இருக்கின்றதோ அதனை எல்லாம் முடிவுக்கு கொண்டு வந்து பொங்கல் திருநாளன்று ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கூறினார்.